கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு ரூ.14 கோடி ஊதியம்; ரூ.1,707 கோடி பங்கு மதிப்பு!
கூகுள் தாய் நிறுவனம் ஆல்பெபட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ள சுந்தர் பிச்சைக்கு 240 மில்லியன் டாலர் பங்கு மதிப்பை அந்நிறுவனம் அளித்துள்ளது.
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பெபட் சி.இ.ஓ ஆகியுள்ள சுந்தர் பிச்சை, ஆண்டு சம்பளமாக ரூ.14 கோடி மற்றும் பங்குகள் வாயிலாக ரூ.1707 கோடி பெற இருக்கிறார். இதில் ஆல்பெபட் நிறுவன செயல்பாடு தொடர்பான பங்கு ஊக்கத் தொகையாக ரூ.640 கோடி பெறுகிறார்.
இணைய உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான கூகுள் நிறுவன சி.இ.ஓவாக இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.
2015ல் கூகுள் நிறுவனர்கள், நிறுவன அமைப்பில் பெரும் சீரமைப்பை மேற்கொண்டனர். அதன் படி ஆல்பெபட் எனும் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது. கூகுள் துணைத் தலைவராக இருந்த சுந்தர் பிச்சை அதன் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கூகுள் தாய் நிறுவனம் ஆல்பெபட்டிற்கும், சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. ஆல்பெபட் சி.இ.ஓவாக இருந்த கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இதனையடுத்து, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பெபட் இரண்டையும் வழிநடத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் வந்துள்ளது. ஆல்பெபட் சி.இ.ஓவாக நியமிகப்பட்டுள்ள, சுந்தர் பிச்சை சம்பளம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆல்பெப்ட மற்றும் கூகுள் சி.இ.ஓ என்ற முறையில் சுந்தர் பிச்சை ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் சம்பளம் பெற இருக்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.14 கோடியாகும். மேலும் அவருக்கு பங்கு மதிப்பாக 240 மில்லியன் டாலர் அளிக்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.1,707 கோடியாகும். இதில் 640 கோடி அளவிலான பங்கு மதிப்பு ஆல்பெப்ட செயல்பாடு தொடர்புடையது.
2020ம் ஆண்டு முதல் இந்த சம்பளம் அமலுக்கு வரும். அண்மையில் அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பில் ஆல்பபெட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில், ஜனவரி 1ம் தேதி முதல் இந்த சம்பள உயர்வை சுந்தர் பிச்சை பெற இருப்பதாக அமெரிக்க நாளிதழ் மெர்குரி நியூஸ் தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு கூகுளில் பணிக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை நிறுவனத்தில் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார். கூகுள் குரோம் உள்ளிட்ட சேவைகள் உருவாக்கப்பட்டதில் அவர் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். 2015ல் கூகுள் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சை, 2017ல் ஆல்பெப்ட இயக்குனர் குழுவில் இடம்பெற்றார்.
சுந்தர் பிச்சை தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் அடிப்படையில் புதிய சேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தொகுப்பு: சைபர்சிம்மன்