தொடர் யானைகள் இறப்பு: மனித-யானை எதிர்கொள்ளல் அதிகரிப்பது ஏன்?
மனித - யானை மோதல் என்ற பதம் சொல்லாடல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதனை மனித - யானை எதிர்கொள்ளல் என்றே கருத வேண்டும் ...
கடந்த சில ஆண்டிகளாகவே இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் யானைகள் காட்டைவிட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதாலும், சிலசமயம் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாலும், மனிதர்கள் யானைகளைத் தாக்குவது அதிகரித்து வருகிறது.
அண்மையில் மசினங்குடி காட்டுப் பகுதியில் ரிசார்ட் அருகே ஒரு யானை வந்ததால், அதைத் துறத்து அதன் மீது தீயிட்டனர். காதுப்பகுதியில் தீ பரவி பரிதாபமாக சிகிச்சை கொடுக்கும் முன்னறே அந்த யானை உயிரிழந்தது.
இதேப்போல் கடந்த ஆண்டு கேரளாவில் கர்பமாக இருந்த ஒரு யானையும் விவசாயிகளால் கொல்லப்பட்டது.
மனித - யானை மோதல் என்ற பதம் சொல்லாடல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதனை மனித - யானை எதிர்கொள்ளல் என்றே கருத வேண்டும் ...
மனித - யானை எதிர்கொள்ளல் என்பது சமீபத்தில் தோன்றி நடந்து கொண்டிருப்பது அல்ல. இது நெடுங்காலமாக இருந்து வரும் விஷயம். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையும் அதன் காரணமாக மக்களின் தேவைகள் பெருகி வருவதாலும், இதனைப் பொருட்டு யானைகளும் மற்ற உயிர்களும் வாழும் காட்டுப் பகுதிகள் பெருமளவு அழிக்கப்படுவதாலும் மற்றும் ஆக்கிரமிக்கப்படுவதாலும் இன்ன பிற காரணங்களுக்காகவும் அதன் பரப்பளவுகள் சுருங்குவதாலும் இந்த மனித யானை எதிர்கொள்ளல் நிகழ்கிறது.
இத்தகைய மனித - யானை எதிர்கொள்ளல் பற்றியும், எதிர்காலத்தில் இது களையப்பட எந்த விசயங்கள் தேவை என்பதைப் பற்றியும் சற்று விரிவாக காண்போம்...
தற்போது தரையில் பயணித்துக் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நம்மை, இனி நீங்கள் தண்ணீரில் தான் பயணிக்க வேண்டும் தண்ணீரின் மேல் தான் நடக்க வேண்டும் என்று கூறினால் நாம் எந்த நிலைக்கு தள்ளப்படுவோமோ, அது போலத் தான் தற்போது யானைகளின் வாழ்க்கை உள்ளது.
இது எவ்வாறெனில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனித இனம் தோன்றியது, ஆனால் யானை இனமோ டைனோசர் வாழ்ந்த காலத்தில் இருந்தே இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய யானையினம் ஒரு குணத்தைக் கொண்டுள்ளது. அது என்னவெனில்,
தன்னுடைய மூதாதையர்கள் எந்த பாதையில் பயணித்தார்களோ, அந்த பாதையில் தான் இந்த யானைகள் காலங்காலமாக பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாதைகளுக்கு யானைகளின் வலசை பாதை என்று பெயர். இந்த யானைகளின் வலசை பாதைகள் பெருமளவு தற்போது இல்லாமல் போய் இருப்பதுதான் மனித - யானை எதிர்கொள்ளலுக்கு மிக முக்கியக் காரணமாக திகழ்கிறது .
இப்போது வனப்பகுதிகளில் நடந்து வரும் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகளும் மற்றும் நகரமயமாக்கல் காரணமாகவும், அடுத்தபடியாக நெடுஞ்சாலைகள் பாலங்கள் எனவும் இந்த யானைகளின் வலசை பாதைகள் தற்போது பெருமளவில் இல்லாமல் போய்விட்டன.
இந்த விஷயம் யானைகளுக்குத் தெரியுமா என்றால், தெரியாது என்பதே உண்மை...
விளை நிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும் மற்றும் இன்ன பிற கட்டிடங்களாகவும் தனது வலசை பாதைகள் மாறிவிட்டதை அறியாமல் யானைகள் அந்த பாதைகளில் வருகின்றன.
இதைப் பார்த்து யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன, யானைகள் விளை நிலங்களில் புகுந்து விட்டன, யானைகள் பாதை மாறி வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. யானைகள் அதன் பாதையில் தான் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் அதன் பாதைகள் பறிக்கப்பட்டு விட்டது. இதை மனிதர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை உணராமல் விவசாயிகளும் மற்ற பொதுமக்களும் யானைகளைக் குறை கூறுகின்றனர்.
மேலும் யானைகளின் பாதைகளை அபகரித்தது மட்டுமில்லாமல், யானைகள் வரவேற்கக் கூடாது என்கிற எண்ணத்தில் மின்சார வேலிகளையும் போட்டு விடுகின்றனர். அது மட்டுமில்லாமல் கூர்மையான கம்பிகள் கொண்ட படுக்கைகளை நிலத்தில் பதித்து வைக்கின்றனர்.
இத்தகைய மின்சார வேலைகளிலும் மற்றும் இந்த கூர்மையான நிலத்தில் பதிக்கப்படும் படுக்கைகளாலும் யானைகள் இறப்பு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. யானைகள் மேற்கூறியவாறு இறப்பது மட்டும் இல்லாமல் ரயில் தண்டவாளங்களில் சிக்கியும் யானை இறப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
கடந்த நூற்றாண்டில் லட்சங்களில் இருந்த இந்தியாவின் யானைகளின் எண்ணிக்கை தற்போது வெறும் 27 ஆயிரத்துக்கும் கீழாக சுருங்கிவிட்டது.
சரி நீங்கள் கேட்கலாம் யானையும் மற்ற உயிர்களைப் போல இதுவும் ஒரு காட்டுயிர் தானே என்று, இதன் இழப்புக்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்படுகிறீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழலாம்.
அதற்கான விளக்கத்தையும் தற்போது வழங்குகிறோம்...
ஒரு யானை வழக்கமாக நாளொன்றுக்கு 200 முதல் 250 கிலோ அளவு வரை உணவை உட்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீரை உட்கொள்ளும்.
யானைகளின் உணவு என்பது இலைகள், தழைகள், பழங்கள், மரப்பட்டைகள், குச்சிகள் போன்றவையாகும். மேற்கண்டவாறு நாளொன்றுக்கு யானை உட்கொள்ளும் 200 முதல் 250 கிலோ உணவில் 10% விதைகளும் குச்சிகளும் இருக்கும்.
10 சதவீதம் என்பது 20 முதல் 25 கிலோ விதைகள் குச்சிகளாகும், இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் நடப்படுகிறது இவ்வாறு மண்ணில் நடைபெறுவது மரங்களாக காடுகளாக உருவாகின்றன.
இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குகிறது. ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்கும் போது, இவ்வளவு பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில், இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
யானைகளின் மரணங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டே இருப்பது, வருங்காலங்களில் யானையை படத்தில்தான் காட்ட வேண்டுமோ என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது.
ஒரு யானையை இழப்பது ஒரு காட்டையே இறப்பதற்கு சமம். அதுமட்டுமில்லாமல் யானைகளை இழப்பது நமது சுவாசத்தை நாம் இழப்பதற்கு சமமாகும்.
இது எவ்வாறெனில் மனிதர்களும், இன்ன பிற உயிர்களும் நல்ல சுவாசக் காற்றை சுவாசித்து வாழ, ஒரு நாட்டின் பரப்பளவில் அதன் 33 சதவீத பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது நம்மிடம் 20 சதவீதத்திற்கும் அல்லது 25 சதவீதத்திற்கும் குறைவாகவே காடுகள் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் நாம் பெருமளவில் யானைகளையும் இழந்தால் காடுகளின் உருவாக்கம் பெருமளவு பாதிக்கும்.
காடுகளும் யானைகளும் இல்லாமல் மக்களும், மற்ற உயிர்களும் எவ்வாறு நல்ல சுவாசக் காற்றை சுவாசிக்க முடியும் என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.
ஆகவே மேற்கூறிய விஷயங்களை எல்லாம் அனைவரும் அறிந்து , யானைகள் மனிதர்களின் உற்ற நண்பன் என்பதை உணர்ந்து, யானைகளும் மனிதர்களைப் போலவே கூட்டமாக வாழும் ஒரு தன்மையைக் கொண்ட உயிரினம் என்பதையும், மனிதர்களின் மீது அதிக பாசத்தையும் நேசத்தையும் கொண்டு வாழும் உயிரினம் என்பதையும் உணர வேண்டும்.
இவற்றை மனிதர்கள் உணர்ந்து கொண்டாலே, மனித - யானை எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழாமல் தவிர்க்க முடியும்.
தற்போதைய சூழலில் மனித - யானை எதிர்கொள்ளல் எனும் பிரச்சனை, மிக வேகமாக தீர்வை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியத்தை கொண்டுள்ளது.
இந்த மனித - யானை எதிர்கொள்ளல் பிரச்சனை என்பதை, மனிதர்கள், அரசாங்கம், அரசின் வனத்துறை, எங்களைப் போன்ற சூழலியல் இயற்கை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சூழலையும், இயற்கையையும் நேசிக்கும் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் மூலமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
ஆகவே மேற்கண்ட கூட்டு முயற்சிக்கான சாத்தியக்கூறுகள், எதிர்வரும் காலங்களில் உருவாகி யானை - மனித எதிர்கொள்ளல் பிரச்சனை நீங்கி, யானைகள் நிம்மதியாக காடுகளில் வாழும் சூழல் உருவாகும் என்று நம்புவோம்...!
(கட்டுரையாளர்: ஆசை தமிழ். இவர் காடுகள்.காம் நிறுவனர் மற்றும் தலைவர். சங்கமம் தொண்டு நிறுவனம் மற்றும் இணை அமைப்புகளை நடத்தி வருகிறார். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆகும்.)