'உலகளாவிய பிரச்சனைகளுக்கு இந்தியா தனித்துவமாக தீர்வு காண முடியும்' - ஐஐடி பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா!
சென்னையில் நடந்த தமிழ்நாடு ஸ்டோரி 2024 இல் பேசிய ஐஐடி மெட்ராஸின் பேராசிரியர், பெரிய அளவிலான தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்
இந்தியா தன் பிரச்சனைகளுக்கு தனித்துவமான முறையில் தீர்வு காண வேண்டும் அப்படித் தீர்வு கண்டால் அதே போன்ற பிரச்சனைகளை உலகளவில் நாமும் தீர்க்க முடியும் என்று ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த 'தமிழ்நாடு ஸ்டோரி 2024'இல் பேசிய ஐஐடி மெட்ராஸின் பேராசிரியர், பெரிய அளவிலான தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், ஆற்றல் திறன் சவாலை எதிர்கொள்வது மற்றும் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளை அலசினார்.
"இந்தியா மிகக் குறைந்த தொலைபேசி மற்றும் இணைய இணைப்புக் கட்டணங்களைக் கொண்டுள்ளது. வேறு எங்கும் இப்படி இல்லை. கடந்த முப்பதாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் பற்றாக்குறையாக இருந்த காலத்தில் இருந்து, இந்தியா இப்போது ஐடி சேவைகள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மருந்து தயாரிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் உலகளாவிய தலைமையாக உருவெடுத்துள்ளது," என்று பேராசிரியர் ஜுன்ஜுன்வாலா தெரிவித்தார்.
இத்தகைய முன்னேற்றம் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் இன்னும் காலாவதியான சிஸ்டம்களையும் உள்கட்டமைப்புகளையும் வைத்துக் கொண்டு போராடுகின்றன, இதனால் தொழில்நுட்பத் துறையில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் சவாலாக இருக்கிறது, என்றார்.
![Jhunjunwala](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/jhunjunwala-1721880311044.jpg?fm=png&auto=format&w=800)
நான் இந்தியாவுக்கு வந்தபோது 50% பட்டதாரிகள் பொறியாளர்களாக இருந்தார்கள். ஒருகாலத்தில் தொலைபேசிகள் என்பது குதிரைக்கொம்பு. ரூ.40,000த்திலிருந்து ரூ.10,000 ஆக 1990களில் தொலைபேசி விலை குறைக்கப்பட்டவுடன் அதிகம் பேர்களுக்கு பரவலானது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட இந்தப் புரட்சி இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
1980களில் கூட கல்வியில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. ஆனால், நாம் பாசிட்டிவ் அம்சங்களைப் பார்ப்போம், இன்று, இந்தியா ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகிறது. இருப்பினும், கல்வியானது வெறும் கோட்பாட்டு அறிவைக் காட்டிலும் நடைமுறை பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
"பல இளைஞர்கள் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக கட்டுரைகளை வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றனர். 2000-2005 ஆம் ஆண்டில் கல்வியாளர்களையும் தொழில்துறையையும் ஒன்றிணைத்தோம். இந்தியாவின் வளர்ச்சியில் இப்போது ஒருங்கிணைந்த ஸ்டார்ட்அப்களைக் காப்பதற்கு இந்த ஒத்துழைப்பு வழிவகுத்தது."
நாங்கள் அரசிடமிருந்தோ, தொழில் துறையிடமிருந்தோ நிதி வாங்கவில்லை; வங்கியில் கடன் வாங்கினோம். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. பலர் இங்குதா வேலை செய்ய விரும்புகிறார்கள், என்று பேசினார் ஜுன்ஜுன்வாலா.