120 மொழிகளில் பாடல்கள் பாடி விருது வென்றுள்ள இந்திய வம்சாவளி சிறுமி!
துபாய் வாழ் இந்திய சிறுமியான 13 வயது சுச்சேதா சதீஷ், ’100 குளோபல் குழந்தை மேதை விருது 2020’ வென்றுள்ளார். இவர் எத்தனை மணி நேரம் தொடர்ந்து பாடினார் தெரியுமா?
இன்று இந்தியக் குழந்தைகள் பலர் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்து நாட்டைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் துபாயில் வசிக்கும் இந்தியச் சிறுமியான 13 வயது சுச்சேதா சதீஷ் இசைப் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
சுச்சேதா இந்திய வம்வாசளியைச் சேர்ந்தவர். இவர் துபாயில் வசித்து வருகிறார். அங்குள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்.
இவர் ஒரே இசை நிகழ்ச்சியில் அதிக மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி நேரலையில் இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் பாடியுள்ளார். இந்த சாதனைகளுக்காக இந்தச் சிறுமிக்கு ’100 குளோபல் குழந்தை மேதை விருது 2020’ வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கச்சேரியில் சுச்சேதா 6.15 மணி நேரம் தொடர்ந்து 102 மொழிகளில் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். இந்த விருது நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மாடலிங், அறிவியல், கண்டுபிடிப்பு, விளையாட்டு என பல்வேறு பிரிவுகளின்கீழ் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் இந்த விருதினை இணைந்து வழங்குகின்றனர்.
சுச்சேதா ‘யா ஹபிபி’ என்கிற தனது இரண்டாவது ஆல்பத்தை மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி மற்றும் நடிகர் உன்னி முகுந்தன் முன்னிலையில் வெளியிட்டார்.
முன்னதாக இவர் 2017-ம் ஆண்டில் 80 மொழிகளில் பாடல்களைப் பாடினார். அதன் பிறகு கின்னஸ் சாதனையை முறியடிக்க 85 மொழிகளில் பாடல்களைப் பாட திட்டமிட்டு கூடுதலாக ஐந்து மொழிகளில் பாடல்களைப் கற்றுக்கொண்டார்.
இவர் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் ஆங்கில மொழியிலேயே பாடல்களைப் பாடியபோதும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் பாடல்கள் பாடத் தொடங்கினார். இவர் முதல் வெளிநாட்டு மொழிப் பாடலாக ஜப்பான் மொழியில் பாடியுள்ளார். பிரெஞ்சு, ஹங்கேரியன், ஜெர்மானிய மொழி ஆகிய மூன்று மொழிகளில் பாடுவது மிகவும் கடினமாக இருப்பதாக சுச்சேதா குறிப்பிடுகிறார்.