குண்டு துளைக்காத கவசத்தை உருவாக்கிய ராணுவ அதிகாரி!
ஸ்னைப்பர் ரக துப்பாக்கித் தாக்குதலை எதிர்கொண்டு அதன் தீவிரத்தையும் குறைக்கும் ஆற்றல் கொண்ட குண்டு துளைக்காத கவசத்தை மேஜர் அனூப் உருவாக்கியுள்ளார்.
இந்தியா ராணுவ மேஜர் ஒருவர், ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுடப்படும் தோட்டாக்களையும் தடுக்கும் திறன் கொண்ட ’சர்வாத்ரா’ எனும் குண்டு துளைக்காத கவசத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த புதிய குண்டு துளைக்காத கவசத்தை உருவாக்கியுள்ள மேஜர் அனூப் மிஸ்ரா, களத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம் காரணமாக இந்த கவசத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.
“ஒரு தாக்குதலின் போது, என்னுடைய குண்டு துளைக்காத கவசத்தை ஒரு குறி தவறிய தோட்டா பதம் பார்த்தது. அந்த தாக்கம் உடல் மீது அதிகமாக இருந்தது. எனவே தாக்கத்தின் தீவிரத்தை உடலுக்கு கடத்தாத குண்டு துளைக்காத கவசத்தை நானே வடிவமைக்கத் தீர்மானித்தேன்,” என்று இது தொடர்பான ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார்.
இந்த குண்டு துளைக்காத கவசம் 10 மீட்டர் அருகாமையில் இருந்து சுடப்பட்டாலும், தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரி உதவியுடன் இந்த கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தோட்டா தாக்குதலில் இருந்து இது பாதுகாக்கும்.
இந்த கவசத்தை உருவாக்கியதற்காக மேஜர் அனூப்பிற்கு, ராணுவ வடிவமைப்பு விருந்து ராணுவ தளபதி பிபின் ராவத்தால் இந்த வார துவக்கத்தில் வழங்கப்பட்டது.
“கட்டுப்பாடு கோடு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கைத்துப்பாக்கி தாக்குதல்கள் அதிகரிப்பதை அடுத்து, வீரர்கள் முழு உடல் பாதுகாப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த குண்டு துளைக்காத கவசம் தரைப்படைப் பிரிவில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக அனூப் கூறியதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.
மேலும் இந்த குண்டு துளைக்காத கவசங்களை தயாரிப்பதற்கான டெண்டர் இந்திய ராணுவத்திடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பாதுகாப்பு துறை பார்ட்னர்கள் இதை உற்பத்தி செய்வார்கள்.
இந்த தொழில்நுட்பத்தை பெற்றுள்ள மூன்றாவது நாடாக இந்திய திகழ்வதாக அனூப் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்