புக் செய்தால் வீட்டுக்கே இலவச ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: ஓலா அறிவித்திருக்கும் புதிய திட்டம்!
மக்களுக்கான இலவச சேவையில் ஓலா!
பிரபல நிறுவனமான Ola பெங்களூரை தளமாகக் கொண்ட GiveIndia உடன் கைகோர்த்திருக்கிறது. இந்த புதிய இணைப்பின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு இலவச ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க O2forIndia என்ற முயற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஓலா பவுண்டேஷன் மூலம், நிறுவனம் ஆரம்ப தொகுப்பாக, இந்த வாரம் பெங்களூரில் 500 ஆக்ஸிஜன் செறிவூட்டல்களைக் கொண்டுவர இருக்கிறது. வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் 10,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்குவதற்காக இந்த சேவை மேம்படுத்தப்படும் ஓலா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள ஓலாவின் தலைவரும், ஓலா குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால்,
“முன்னோடியில்லாத இந்த காலங்களில் நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் சமூகங்களுக்கு உதவ வேண்டும். மிகவும் கடினமான காலங்களில் மிகவும் தேவையான ஆதரவைக் கொண்டுவருவதாக இந்த முயற்சி உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும், பாதிப்புக்குள்ளானவர்களிடையே வலி மற்றும் கவலையைத் தணிக்க இது உதவுகிறது," என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, ஆக்ஸிஜன் செறிவூட்டல் வேண்டும் என விரும்புபவர்கள், ஓலா நிறுவனத்தின் ஆப்-பில் சில அடிப்படை விவரங்களை வழங்குவதன் மூலம் அதனை பெற முடியும் என்ற வகையில் அந்த ஓலா ஆப்-பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆப் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டதும், ஓலாவின் வண்டி ஓட்டுநர்களில் ஒருவர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு கொண்டுபோய் வழங்குவார். பின்பு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை முடிந்தபின் அதை மீண்டும் எடுத்துக்கொள்வார். இதற்காக அவர்களிடம் எந்த கட்டணமும் இல்லை. ஆக்ஸிஜன் செறிவு மற்றும் போக்குவரத்து இரண்டும் இலவசம் என பவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
”இந்த முன்முயற்சியின் மூலம், வீட்டிலிருந்தே மீண்டு வர நினைப்பவர்களுக்கு அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவோம். ஆக்ஸிஜனை எளிதில் அணுகுவது பல நோயாளிகளின் மன உளைச்சலைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கிவ்இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் 2.0, அதுல் சதீஜா கூறி இருக்கிறார்.
COVID-19 இன் இரண்டாவது அலை இந்திய குடிமக்களை தவிக்கவைத்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகள் காரணமாக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் செறிவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
மேலும், மக்கள் உதவி பெற ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை நாடி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் COVID தொடர்பான உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு நிதித் திரட்டலையும் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.