இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகளும், சவால்களும்!
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக விரும்பும் நிலையில், திறன் வாய்ந்த, கல்வி பயின்ற பெண்களை முழுமையாக பங்கேற்கச்செய்வதை நாடு உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் பெண்கள் நீண்ட தொலைவு முன்னேறி வந்துள்ளனர். கல்வி, சுகாதாரம், சமூக- பொருளாதார அதிகாரமளித்தல், சட்ட உரிமைகள் ஆகியவற்றுக்கான அளவுகோள்கள் பெரும் மாற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், பெண்களின் முழுமையான சமூக, பொருளாதார அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை பொறுத்தவரை இந்தியா இன்னமும் ஆரம்ப கட்டங்களில் தான் உள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக விரும்பும் நிலையில், திறன் வாய்ந்த, கல்வி பயின்ற பெண்களை முழுமையாக பங்கேற்கச்செய்வதை நாடு உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் பெண்கள் ஆற்றல் இன்னமும் முழுவதுமாக பயன்படுத்தப்படவில்லை
இந்தியா 2013ல் 7.3 சதவீத துடிப்பான வளர்ச்சி மூலம் பொருளாதார எதிர்பார்ப்பை மிஞ்சினாலும், வங்கதேசம், இந்தோனேசியா, பிரேசில் போன்ற நாடுகளை விட இன்னமும் குறைவான பெண்கள் பங்கேற்பை பணியிடத்தில் கொண்டுள்ளது.
பெண்களின் பங்கேற்பை வலியுறுத்துவதற்கான பொருளாதார வாதங்களை மறுக்க முடியாதவையாக உள்ளன. இந்தியாவால் ஆண்கள் அளவுக்கு பெண்களின் பணியிட பங்கேற்பை உயர்த்த முடிந்தால், அதன் ஜிடிபி 27 சதவீதம் அதிகரித்து 770 பில்லியன் டாலராக உயரும்.
மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் பெண் தொழில்முனைவோர்கள் அட்டவனையில் இந்தியா 65 நாடுகளில் 57 வது இடத்தில் உள்ளது. பெண்கள் நடத்தும் மத்திய மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 27,75,390 என அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவு செய்த நிறுவனங்களில் இது 18.8 சதவீதம் தான்.
தடைகள் எவை?
பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியது போல, படித்த பெண்கள் மிகுந்த லட்சியம் கொண்டிருந்தாலும், மூன்று முக்கிய தடைகளை எதிர்கொள்கின்றனர்:
சமூக, கலாச்சார நெறிமுறைகள்: கலாச்சார பாத்திர எதிர்பார்ப்புகள், குறிப்பாக திருமணம், குடும்ப பொறுப்புகள், குழந்தைகள் நலம் போன்றவை.
ஆதரவு அமைப்பு: போதிய அளவு பாதுகாப்பான, நம்பகமான குழந்தைகள், பெரியவர்கள் நலன் சேவை இல்லாதது. நகரங்களில் உள்ள தனி குடும்பங்களுக்கு இது அதிகம் பொருந்தும்.
பாதுகாப்பு: பணியிடத்திற்கு சென்று வரும் போதும், ஏன் பணியிடத்திலும் கூட பெண்கள் பாதுகாப்பான சூழலை பெறுவதில்லை.
தொழில்முனைவு வாய்ப்பு
வருமானம் ஈட்டவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும், தங்கள் திறன், கல்வி, அனுபவம் ஆகியவற்றை தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொழில்முனைவில் நல்ல சமநிலை வாய்ப்பாக அமையும். பெண்கள் இல்லத்தில் இருந்தே தொழில் துவங்கலாம். அதே நேரத்தில் குடும்ப பொறுப்புகளையும் கவனித்துக்கொள்ளலாம்.
தொழில்முனைவு தடைகள்
பெண் தொழில்முனைவோர்களுக்கு பாதை எளிதாக இருப்பதில்லை. நடுத்தர, சிறுதொழில் துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சி பங்களிப்பு வாய்ப்பை அரசு எதிர்நோக்கியிருந்தாலும், இந்திய பெண்களுக்கான தொழில்முனைவு சூழல் சவாலானதாக இருக்கிறது.
2020 வரைவு திட்டம்: இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவை வேகமாக்குதல்’ எனும் CWE அறிக்கை பெண்கள் தொழில் துவங்க அல்லது தொழில் வளர்ச்சி அடைய தடையாக எதிர்கொள்ளும் ஆறு முக்கிய சவால்களை குறிப்பிட்டது.
ஏற்கனவே உள்ள மற்றும் ஆர்வம் உள்ள பெண் தொழில் முனைவோர்களுக்கு நிதி, தகவல்கள், சந்தை, வலைப்பின்னல், பயிற்சி ஆகியவற்றுக்கான அணுகல் வசதியை அளிப்பதன் மூலம் விற்றுமுதல், லாபம், பெண்களின் வேலைவாய்ப்பில் பெரும் முன்னேற்றம் காணலாம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பெண்கள் தங்கள் குடும்பம், சார்ந்துள்ள சமூக குழு நிலையை மேம்படுத்தி எஸ்.டி.ஜி காரணிகளில் இந்தியாவின் செயல்பாட்டை உயர்த்துகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
2024 ல் நிலை என்ன?
இந்த ஆறு தடைகள் இன்னும் வலுவாக இருப்பதாகக் கருதுகிறோம். CWE நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் உறுப்பினர்கள் கீழ்கண்ட வரிசையில் தங்கள் சவால்களை பட்டியலிட்டனர்.
- சந்தைக்கான அணுகல்
- நிதிக்கான அணுகல்
- வலைப்பின்னலுக்கான அணுகல்
- தகவலுக்கான அணுகல்
- திறன்களுக்கான அணுகல்
- தொழில்நுட்பத்திற்கான அணுகல்
- இன்றைய வாய்ப்புகள்
நிதி திரட்டல்
சர்வதேச தேக்கநிலையை மீறி, துடிப்பான இந்திய பொருளாதாரம் பெண்கள் வழிநடத்தும் தொழில்களுக்கு போதிய நிதி கிடைக்கும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
WTO மற்றும் சர்வதேச வர்த்தக மையம் இணைந்து, WTO-ITC டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண் ஏற்றுமதியாளர்கள் நிதியை (WEIDE) உண்டாக்கியுள்ளது. பெண் தொழில்முனைவோரின் போட்டித்தன்மையை அதிகரித்து புதிய சந்தை வாய்ப்புகளை பெற டிஜிட்டல்மயமாக்கலை பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிதி உருவாக்கப்பட்டது. இந்திய பெண் தொழில்முனைவோரை சர்வதேச ஏஞ்சல் முதலீட்டாளர்களுடன் இணக்கும் ஏஞ்சல் நிதியும் உருவாக்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளன.
சந்தை
மத்திய, மாநில அரசுகள், வர்த்தகத் துறையின் பொது கொள்முதல் நல்ல வாய்ப்பாகும். பெண்கள் நடத்தும் நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து 3 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தினாலும், 1.22 சதவீதமே 2023ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகளும் இதே போல திட்டங்கள் கொண்டுள்ளன.
எல்லா நாடுகளிலும் அரசே மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்வதால், பெண் தொழில்முனைவோர் தங்களுக்கான வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களும் பெண்களிடம் இருந்து செலவு குறைந்த தரமான பொருட்கள், சேவைகளை பெறும் அதே நேரத்தில் தங்கள் சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இந்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்திக்கொள்ள கொள்முதல் குழுக்களுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் தேவை. பெண் தொழில்முனைவோர்கள் அரசு மற்றும், வர்த்தக நிறுவனங்களின் தேவைகளை, கொள்முதல் செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும்.
துறை சார்ந்த முதலீடுகள்
வளர்ச்சி வாய்ப்புள்ளதாக நாங்கள் காணும் சில துறைகள்: சழற்சி பொருளாதாரம்/ நீடித்த வளர்ச்சி, பசுமை நுட்பம், ஆக்கத்திறன் ஏஐ துறை சார்ந்த பயன்பாடு (சட்ட நுட்பம், கல்வி நுட்பம்).
பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான கர்நாடக மாநில அரசு திட்டத்தின் 2023 வெற்றியாளரும், பேடண்டி டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் சி.இ.ஓ அம்ருதா மூர்த்தி, ஐபி துறையில் ஏஐ பயன்பாட்டை கொண்டு வருகிறார்.
மனிதர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பு சிந்தனை மற்றும் ஏஐ கொண்டு துறையின் போக்குகளை கணிக்கிறார்.
“எனது நிறுவனம் துவங்கி ஓராண்டு ஆகிறது. அரசு நிதி தவிர, முதலீட்டாளர்கள் நிதியும் கிடைத்துள்ளது,” என்கிறார்.
தொழில்முனைவு சூழல் விரிவாக்கம்
இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்தும் தொழில்முனைவு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நகரங்களில் உள்ள பெண்கள் தொழில்முனைவு தரும் வளைந்து கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றனர். உள்ளூர் பொருட்கள் பயன்பாடு, புதுமையாக்கத்துடன், தேசிய மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் அளிக்கிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லாத பொருளாதார வளர்ச்சி சூழலில், பெண் தொழில்முனைவோர்கள் கீழ்மட்டத்தில் உண்டாக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளூர் சமூகத்தை மேம்படுத்துவதோடு, பெண்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வரும்.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வரும் ஆண்டுகளில் நம்முடைய முன்னிலையை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் சூழலில், 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைய, பெண்களின் பங்கேற்பு முக்கியம்.
இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் தொடர்பான அறிக்கையை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
ஆங்கிலத்தில்: சுசரிதா ஈஸ்வர், ஸ்ருதி சத்சங்கி - தமிழில்: சைபர் சிம்மன்
'1 கோடி விண்ணப்பம்' - வேலைக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டும் 2ம், 3ம் கட்ட நகரப் பெண்கள்!
Edited by Induja Raghunathan