பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்: Whatsapp இடம் ஆய்வு நடத்த அரசு திட்டம்!
பயனாளிகள் போனில், உளவு மென்பொருள் நிறுவ வழி செய்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக வாட்ஸ் அப் பாதுகாப்பு அமைப்பை ஆய்வு செய்ய அரசு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை அடுத்து, வாட்ஸ் அப் பாதுகாப்பு அமைப்பு குறித்து அரசு ஆய்வு செய்ய விரும்புவதாக, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜன்சி குழு (CERT-In) வாட்ஸ் அப் சேவையின் முழு பாதுகாப்பு அமைப்பை மற்றும் செயல்முறையை ஆய்வு மற்றும் சோதனை செய்ய விரும்புவதாக அண்மையில் மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த விவாதத்தின் போது, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இருப்பினும், இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை அரசு வாக்கியா என காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
வாட்ஸ் அப் நிறுவன அதிகாரிகளை உள்துறை அமைச்சர் சந்தித்தது பற்றிய கேள்விக்கு,
வாட்ஸ் அப் அதிகாரிகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர், அவர்கள் அமைச்சரையும் சந்தித்தனர் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பெகாசஸ் மென்பொருளை வாங்கியவர்கள், 1,400 வாட்ஸ் அப் பயனாளிகள் போனில் உளவு பார்க்க உதவியதாக, கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.
அரசு அதிகாரிகள், அரசியல் அதிருப்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இந்த உளவுக்கு உள்ளானார்கள், இந்தியாவில் 121 பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். சைபர் பாதுகாப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி-இன், வாட்ஸ் அப் பாதுகாப்பு அமைப்பு, செயல்முறை குறித்து ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கான தேவை உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ் அப்பிடம் இருந்து நவம்பர் 9ம் தேதி கேட்டிருந்ததாகவும், 18ம் தேதி அளிக்கப்பட்ட பதிலை அடுத்து 26ம் தேதி மேலும் விவரங்கள் கோரப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வாட்ஸ் அப் சி.இ.ஓ அமைச்சக அதிகாரிகளை சந்தித்த போது பெகாசஸ் விவகாரம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், டிஜிட்டல் நிறுவனங்கள் பொருத்தமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு, பெகாசஸ் மென்பொருள் தொடர்பாக மற்றும் இந்திய பயனாளிகள் பாதிப்பு தொடர்பாக தகவல்கள் கேட்டு நவம்பர் 26ம் தேதி என்.எஸ்.ஓ குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் அப், சி.இ.ஆர்.டி – இன் அமைப்பிடம் தகவல் தெரிவித்ததாகவும், மொபைல் சாதனங்களில் ஊடுருவதற்கான வாய்ப்புள்ள ஓட்டை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வன்முறை தொடர்பான செய்தி மற்றும் வீடியோக்களின் தோற்றுவாயை கண்டறிவது தொடர்பாக, அமெரிக்கா, யு.கே மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுடன் இணைந்து வாட்ஸ் அப்புடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
”எந்த செய்தியேனும் தூண்டுதலாக அமைந்தால் அல்லது வன்முறை வெடிக்கக் காரணமானால், அதை துவக்கியது யார் என நீங்கள் சொல்ல வேண்டும். இது தொடர்பான பேச்சு நடத்தி வருகிறோம்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வன்முறைக்குக் காரணமாக செய்தி தோன்றிய இடம் குறித்து புலனாய்வு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். இது போன்ற பல செய்திகள் பாகிஸ்தானில் இருந்து உருவாகி வந்தவை என்றும் அவர் கூறினார்.
”பல நேரங்களில் இந்த செய்திகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவை. பாதுகாப்பு காரணங்களுக்காக இது குறித்த விவரங்களை பகிர முடியாது,” என்றும் அவர் கூறினார்.
இந்த பேச்சு நடந்து கொண்டிருந்த போது தான், என்.எஸ்.ஓ உளவு விவகாரம் நடைபெற்றது என்றும் இது தற்செயலானது என்றும் அவர் கூறினார். தரவுகள் பாதுகாப்பு சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, அரசு அமைப்புகள் சார்பில் ஏதேனும் அனுமதி இல்லாத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, தான் அறிந்தவரை அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் பதில் அளித்தார். தரவுகள் பாதுகாப்பில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்