புனே சீரம் இன்ஸ்டிடியூட் தீ விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவரும் எம்.டி.யுமான சைரஸ் எஸ் பூனவல்லா, புனே சீரம் இந்தியா இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ .25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் கோவிட் தடுப்பூசிகளைத் தயாரித்து விநியோகித்துவரும் சீரம் நிறுவனத்தின் புனே இன்ஸ்டிடியுட்டில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
நோய்த்தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் Covishield தடுப்பூசி தயாரிக்கப்படும் இடமான மஞ்சரி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். இதுகுறித்து பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“தீவிபத்து ஏற்பட்டதும் அந்த இடத்துக்கு இன்ஸ்டிடியூட் வளாகத்திற்கு தீணைப்பு வண்டிகள் விரைந்தன. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றார்.
இதற்கிடையில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்து தான் வேதனையடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்,” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஐந்தாவது மாடியில் இருந்து உயிரிழந்த 5 பேரும் சடலங்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டன. மேலும் 9 பேர் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் வருத்தமான நாள் இன்று. மஞ்சரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள கட்டத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என்று நிறுவனர் பூனவல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த செய்தி அறிந்து நாங்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது தொடர்பாக, விதிமுறைகளின்படி கட்டாயத் தொகையைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்," என்று பூனவல்லா கூறியுள்ளார்.
கட்டிடங்களில் இருப்பு மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் கோவிஷீல்ட் உற்பத்தியில் எந்த இழப்பும் ஏற்படாது என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி: பிடிஐ | படம்: indianexpress | தமிழில்: மலையரசு