ரூ.182 கோடிக்கு முடிந்த ரூ.1200 கோடி டீல்; ரிலையன்ஸ்-ன் 'வியபார யுக்தி' கற்றுக் கொடுக்கும் பாடம்!
இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,200 கோடி மதிப்பாக இருந்த அர்பன் லேட்டர் நிறுவனத்தை, இப்போது ரூ.182 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கி இருக்கிறது.
’அர்பன் லேடர்’ என்ற நிறுவனம் ஆன்லைன் ஃபர்னிச்சர் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியிருப்பது சிறப்பான யுக்தி. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,200 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது அதே நிறுவனத்தை ரூ.182 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
இந்த தொழில் யுக்திதான் ரிலையன்ஸிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
’அர்பன் லேடர்’ நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் பிரிவான ‘ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் 2023ம் ஆண்டுக்குள் ரூ.75 கோடியை ரிலையன்ஸ் முதலீடு செய்ய இருக்கிறது. ரிலையன்ஸை பொறுத்தவரை, ஒருபுறம் முதலீட்டை திரட்டும் பணியில் இருந்தாலும், மறுபுறம் நிறுவனங்களை கையகப்படுத்தும் வேலையும் செய்து வருகிறது.
சரி அர்பன் லேடர் பற்றி பார்ப்போம்..
2012ம் ஆண்டு ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் ‘அர்பன் லேடர்`. ’கலாரி கேபிடல்’ ‘எஸ்ஏஐஎப் கார்னர்’ ’ஸ்டெட்வியூ கேபிடல்’ ’செக்கோயா கேபிடல்’ ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. இதுவரை ரூ.750கோடி முதலீட்டை அந்நிறுவனம் திரட்டியிருக்கிறது. ரூ.180 கோடியில் இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியிருப்பது சிறப்பான டீல்தான், ஆனால் அர்பன் லேடர் நிறுவனத்துக்கு இது சிறப்பானதா?
அர்பன் லேடர் ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல் பிரதான நகரங்களில் ஸ்டோர்களை இந்நிறுவனம் அமைத்திருக்கிறது. 1200 கோடியிலிருந்து ரூ.180 கோடிக்கு விற்க என்ன காரணம் என்பதை பார்ப்போம்?
அத்தியாவசியப் பொருட்கள் அடிக்கடி வாங்குவோம். ஆனால், ஃபர்னிச்சர் என்பது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வணிகம். அதனால் ஒவ்வொரு முறையும் புதுபுது வாடிக்கையாளர்களைத் தேடவேண்டும் என்பது இந்தத் தொழிலின் அடிப்படை விதி.
இந்த ஆன்லைன் ஃபர்னிச்சர் என்பது ஒட்டுமொத்த வணிகத்தில் மூன்று சதவீதம் மட்டுமே. ஃபர்னிச்சர் சந்தையின் மதிப்பு 1,700 கோடி டாலர் என்றால், இதில் மூன்று சதவீதம் மட்டுமே ஆன்லைன் ஃபர்னிச்சர் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.
2015ம் ஆண்டு அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஃபர்னிச்சர் பிரிவைத் தொடங்கின. தவிர, ஃபர்னிச்சர் பிரிவில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமான IKEA சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செயல்படத் தொடங்கியது.
தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய ரீடெய்ல் ஸ்டோரை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அத்துடன், பூனே மற்றும் மும்பை நகரங்களில் அடுத்த சில மாதங்களில் ஸ்டோர்களை தொடங்க இருக்கிறது. மேலும், முக்கியமான நகரங்களிலும் தொடங்க இருக்கிறது. அத்துடன், இணையம் மூலமாகவும் விற்பனை செய்துவருவதால் ஆன்லைன் ஃபர்னிச்சர் என்னும் துறையில் இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது.
அதனால் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விரிவாக்கப் பணிகள் குறைக்கப்பட்டன. பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள். தவிர, அர்பன் லேடர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, ஓர் ஆண்டுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து விலகினார். நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் நிறுவனத்தின் வானி கோலாவும் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார். இப்படியான பல பிரச்னைகள் இருந்தாலும் அர்பன் லேடர் நிறுவனத்தை குறைந்து மதிப்பிட முடியாது.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இது சிறப்பான டீல். இரு ஆண்டுகளுக்கு முன்பு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருந்த நிறுவனத்தை 182 கோடிக்கு வாங்கி இருக்கிறது. ஏற்கெனவே ரீடெய்ல் பிரிவில் கணிசமான சந்தை இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ், அண்மையில் தான் பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகப் பிரிவு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வேர்ஹவுசிங் பிரிவுகளை ரூ.24,713 கோடிக்கு ஸ்லம்ப் விற்பனை அடிப்படையில் கையகப்படுத்தியது. ரீடெய்ல் துறையில் ஒவ்வொரு பிரிவையும் இணைந்துக்கொண்டே வருகிறது. இது ரிலையன்ஸிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.