100 நாட்கள் தினம் 9 மணி நேரம் தூங்கினால் ரூ.1லட்சம் சம்பளம்!
பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம், இப்படி ஒரு அறிவிப்புடன், வேலையை தருவது எதற்கு என்று தெரியுமா? தூக்கப் பிரியர்களே உள்ளே உள்ள லின்க்கில் உடனே விண்ணப்பியுங்கள்...
வேலை செய்யும் போது தூங்கி வழியும் பலரை பார்த்திருக்கிறோம். ஆனால், தூங்குவதே வேலையாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்ததுண்டா?
பெங்களூருவைச் சேர்ந்த ’வேக்ஃபிட்’ (Wakefit) நிறுவனம் தான் இப்படி ஒரு புதுமையான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
ஆம், இணையம் மூலம் தூக்கம் தொடர்பான தீர்வுகளை வழங்கி வரும் ’வேக்ஃபிட்’ நிறுவனம், வேக்ஃபிட் தூக்க இன்டெர்ன்ஷிப் எனும் புதுமையானத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 100 நாட்கள் தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனம் அளிக்க முன் வந்துள்ள இந்த கனவு வேலைக்குத் தேர்வு ஆகுபவர்கள், இந்த வேலையை தங்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம் தெரியுமா? ஆம், அவர்கள் தங்கள் வீட்டிலேயே சொகுசாகத் தூங்கலாம்.
ஆனால், தூங்கி வழிபவர்கள், மன்னிக்கவும் வேலைக்குச் சேருபவர்கள், நிறுவனம் அளிக்கும் தூக்கத்தை கண்காணிக்கும் சாதனத்தை பொறுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தூங்கும் விதம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். இது தவிர நிறுவனத்தின் தூக்க வல்லுனர்கள் அளிக்கும் ஆலோசனைகளயும் பெற்றுக்கொள்ள வேண்டும். தூங்குவதற்கான பிரத்யேக படுக்கை, தலையனைகளையும் நிறுவனம் வழங்கும்.
தூங்குவது தான் வேலையே என்பதால், வேலைக்கு நடுவே தூங்காமல் இருப்பது அல்லது லேப்டாப்பில் நேரம் செலவிடுவது போன்றவை ஏற்றுக் கொள்ளப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், தங்களின் தூங்கும் ஆற்றலை விளக்கும் வீடியோ ஆதாரத்தை அனுப்பி வைக்க வேண்டும். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தூங்கிவிடும் ஆற்றல் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தூக்க வல்லுனர்களின் நேர்காணலுக்குப் பின் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்.
இந்த வேலைக்குத் தகுதி இருப்பதாக நினைப்பவர்கள் www.wakefit.co/sleepintern எனும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
“தூக்கம் தொடர்பான தீர்வுகளை அளிக்கும் நிறுவனம் என்ற முறையில், மக்கள் சிறந்த முறையில் தூங்க ஊக்குவிப்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் நம்முடைய வேகமான வாழ்க்கையில், தூக்கம் பாதிக்கப்பட்டு நம்முடைய உடல் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகிறது. நன்றாக தூங்குபவர்களைக் கொண்டாடுவதன் மூலம், தூக்க ஆரோக்கியம் மீது கவனத்தை கொண்டு வர விரும்புவதாக, ‘வேக்ஃபிட் நிறுவன இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்க கவுடா கூறுகிறார்.
“வாழ்க்கையில் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக உள்ள, சிறப்பாக தூங்குபவர்களை இந்தத் திட்டத்திற்காக தேர்வு செய்ய இருப்பதாகவும் அவர் கூறுகிறார். நம் வாழ்க்கையில் பணி- வாழ்வு சமனைக் கொண்டு வருவதற்கான இன்னொரு முயற்சி இது என்கிறார் அவர்.
2016ல் அங்கித் கார்குடன், சைதன்யாவால், துவக்கப்பட்ட Wakefit நிறுவனம், மெத்தை, தலையனை உள்ளிட்ட புதுமையான, நவீனமான தூக்கம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தூக்க அறை உள்ளிட்ட புதுமையான மார்க்கெட்டிங் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. புதுமையான ஸ்டார்ட் அப் உள்ளிட்ட விருதுகளையும் நிறுவனம் வென்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.wakefit.co/
தொகுப்பு: சைபர்சிம்மன்