ஜூன் மாதமே தன் சிலைக்கு ஆர்டர் கொடுத்தாரா எஸ்பிபி? சிலை வடித்த சிற்பி கூறும் உண்மை!
மறைந்த பாடகர் எஸ்பிபி, தன் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து, தனக்கு சிலை வடிக்க ஆந்திர சிற்பியிடம் ஆர்டர் கொடுத்ததாக பரவும் தகவல் உண்மையா? இதைப் பற்றி சிற்பி ராஜ்குமார் கூறுவது இதோ!
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளராய் விளங்கிய எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மரணத்தால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. எப்படியும் கொரோனா அரக்கனிடம் போராடி அவர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது இசை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அன்பு, காதல், கோபம், ஏமாற்றம், நம்பிக்கை, சோகம் என எல்லாவித உணர்ச்சிகளையும் தன் குரலில் கொண்டு வந்து பாட்டுடைத்தலைவனாகத் திகழ்ந்த எஸ்பிபியின் மறைவிற்கும், அவரது பாடல்களே மருந்தாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு.
இந்தச் சூழ்நிலையில் தான், தனக்குத் தானே சிலை வடிக்கச் சொல்லி தன் மரணத்தை முன்கூட்டியே எஸ்பிபி கணித்ததாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் உடையார், அந்தச் சிலையை செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
இதன் உண்மைத்தன்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட சிற்பி ராஜ்குமாரையே நேரடியாகத் தொடர்பு கொண்டோம்.
சிலை வடிவமைப்பாளர் ராஜ்குமார் நம்மிடம் கூறிய தகவல்படி, கடந்த 2018ம் ஆண்டு தனது தந்தை சாமமூர்த்தி மற்றும் தாய் சகுந்தலாவிற்கு சிலை வைப்பதற்காக ராஜ்குமாரை அணுகியுள்ளார் எஸ்பிபி. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொத்த பேட்டையை சேர்ந்த சிற்பியான ராஜ்குமார் உடையாரும், எஸ்பிபி கேட்டுக் கொண்டபடியே முதலில் அவரது அப்பாவின் சிலையைத் தத்ரூபமாகச் செய்து கொடுத்துள்ளார். தனது தந்தையின் சிலையை நெல்லூரில் உள்ள வேத பாடசாலை ஒன்றில் நிறுவி இருக்கிறார் எஸ்பிபி.
அப்போதே தனக்கும் ஒரு சிலை செய்து தரும்படி கேட்டுள்ளார் எஸ்பிபி. ஆனால் ஏனோ அவரது சிலையைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது ராஜ்குமாருக்கு. எஸ்பிபியின் அம்மாவின் சிலையை சமீபத்தில் செய்து முடித்துள்ளார் ராஜ்குமார். அதனைத் தொடர்ந்து எஸ்பிபியின் சிலையைச் செய்யும் வேலையை அவர் தொடங்கியுள்ளார்.
“முதலில் தனது பிறந்தநாளான ஜூன் 4ம் தேதி தனது சிலையை தன் ஸ்டூடியோவில் நிறுவ எஸ்பிபி ஆசைப்பட்டார். ஆனால் ஊரடங்கால் சிலை செய்யும் வேலை தாமதமாகி விட்டது,” என்கிறார் ராஜ்குமார் உடையார்.
ஏற்கனவே தனது பெற்றோரின் சிலை தொடர்பாக பலமுறை ராஜ்குமாரை நேரில் சந்தித்துள்ளார் எஸ்பிபி. தனது தந்தையின் சிலையைத் தத்ரூபமாகச் செய்து கொடுத்ததற்காக பாராட்டி, பரிசும் வழங்கி இருக்கிறார். எனவே தனது சிலையையும் செய்து தரும்படி கேட்டிருக்கிறார். அதற்கென தனது புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் அனுப்பி இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார் எஸ்பிபி. எனவே அவர் பூரண குணமாகி வீடு திரும்பியதும் அவரது சிலையை ஒப்படைக்கலாம் என நினைத்திருக்கிறார் ராஜ்குமார். ஆனால் தான் ஆசைப்பட்ட தனது சிலையைப் பார்க்காமலேயே காற்றோடு கலந்து விட்டார் எஸ்பிபி.
சிரித்த முகம், நேர்த்தியான ஹேர்ஸ்டைல் என அப்படியே எஸ்பிபியை கண் முன்னே நிறுத்துவது போல தத்ரூபமாக உள்ளது ராஜ்குமார் செய்த அந்தச் சிலை.
சிலிக்கான் வேக்ஸால் செய்யப்பட்ட இந்த எஸ்பிபியின் மெழுகுச் சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போதைக்கு மார்பளவு சிலை மட்டுமே செய்து முடித்துள்ளார். விரைவில் முழு உருவச் சிலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
எஸ்பிபியின் உடல் திருவள்ளூர், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
அந்த நினைவு மண்டபம் கட்டப்படுவது குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சரண் கூறியுள்ளார். அதோடு, எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அந்த நினைவு மண்டபத்தில் எஸ்பிபியின் இந்தச் சிலை நிறுவப்படுமா அல்லது எஸ்பிபி ஆசைப்பட்ட படியே அவரது ஸ்டூடியோவில் இந்தச் சிலை நிறுவப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யார் இந்த ராஜ்குமார் உடையார்?
தற்போது எஸ்பிபியின் சிலையைத் தத்ரூபமாகச் செய்துள்ள சிற்பி ராஜ்குமார் உடையார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர் ஏற்கனவே தமிழகத்திற்கு நன்கு அறிமுகமானவர் தான்.
கடந்த 2018ம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நிறுவப்பட்டது. ஆனால் அது பார்ப்பதற்கு ஜெயலலிதா போன்று இல்லை என்பதால், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அதனைத் தொடர்ந்து புதிய சிலையை ராஜ்குமார் உடையார் தான் செய்து கொடுத்தார். அந்தச் சிலை அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
அப்போது சிற்பி ராஜ்குமாருக்கு முதல்வர் பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்தப் புதிய சிலை 8 அடி உயரமும், 800 கிலோ எடையும் கொண்டது.
இந்தச் சிலைகள் மட்டுமின்றி மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் , சென்னை மேத்தா நகரில் உள்ள சோபன்பாபு, ஆர் எம் கே பொறியியல் கல்லூரி நிறுவனர் முனிரத்னத்தின் மனைவி, எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் உள்ள எம்ஜிஆர் என பல தலைவர்களின் சிலையையும் ராஜ்குமார் உடையார் தத்ரூபமாக வடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.