50 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஓயாமல் கணிதம் கற்றுத் தரும் 77 வயது ஆசிரியர்!
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை புரியும் வகையில் கற்றுக்கொடுத்து பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் நாராயணசாமி.
கடந்த ஐம்பதாண்டுகளாக நாராயணசாமி ஐயர் முழுநேரமாக பணியாற்றியவாறே அனைத்து வயதினருக்கும் அனைத்துத் துறையினருக்கும் கணிதம் கற்றுக்கொடுத்து வருகிறார். வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பது இவரது கருத்து. மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தங்களால் இயன்ற அளவு பங்களிக்கவேண்டும் என்கிறார்.
77 வயதான நாராயணசாமியின் பணி குறித்தும் வாழ்க்கைக் குறித்தும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டபோது அவர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்.
“என்னைப் பற்றி எழுதப்போகிறீர்களா? ஆனால் நான் நரேந்திர மோடியோ அப்துல் கலாமோ இல்லை. நான் ஒரு சாதாரண ஆசிரியர்,” என்றார்.
வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கணிதம் கற்றுக்கொடுப்பது மற்றவர்களுக்கு உந்துதலளிக்கும் விஷயம் என்று கூறினேன். கணிதம் என்ற வார்த்தையை உச்சரித்ததுமே மிகுந்த சுவாரஸ்யத்துடன் உரையாடத் தொடங்கினார்.
நேரம் கடந்துவிடவில்லை என்பதையும் உரையாடல் சலிப்பூட்டம் வகையில் அமைந்துவிடவில்லை என்பதையும் அவ்வப்போது உறுதிசெய்துகொண்டார். அவருடனான உரையாடல் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு என்பதைத் தாண்டி அறிவு மற்றும் அனுபவப் பகிர்வாக இருந்தது. வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதை வலியுறுத்துவதாகவும் எங்களது உரையாடல் அமைந்திருந்தது.
கிராமப்புற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்
நாராயணசாமி தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணமங்கலாவில் Serene Urbana Columbia Pacific Communities என்கிற ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் தினமும் காலை சரியாக 7.30 மணிக்கு காலை உணவு எடுத்துக்கொள்கிறார். வெள்ளைச் சட்டையும் வேஷ்டியும் அவர் மிகவும் விரும்பி அணிந்துகொள்ளும் உடை. இந்த உடையணிந்து காலை 8 மணிக்குக் கையில் சிறிய பெட்டியுடன் தயாராகிவிடுகிறார்.
அருகில் இருக்கும் மாருதி வித்யா மந்திர் பள்ளியில் கணிதம் கற்றுக்கொடுக்கச் செல்கிறார். கணிதம் கற்றுக்கொடுப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே பணி ஓய்வு பெற்ற பிறகு இந்தப் பணியில் ஈடுபட்டார். மணிக்கணக்கில் அங்கு நேரம் செலவிட்ட பிறகு உணவருந்தவும் சற்று ஓய்வெடுக்கவும் வீடு திரும்புகிறார்.
மாலை நேரத்தில் மாருதி எஜுகேஷனல் ட்ரஸ்டில் கிராமப்புற குழந்தைகளுக்காக மூன்று மணி நேரம் வகுப்பெடுக்கிறார். நாள் முழுவதும் அனைத்து வகுப்புகளையும் முழு ஈடுபாட்டுடன் விரும்பி எடுத்துவருகிறார்
”வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே. உங்கள் மனதே உங்களை இளமையாக வைத்திருக்கும். வேறு எந்த விதத்திலும் என் நேரத்தை செலவிட நான் விரும்பவில்லை,” என்றார்.
நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தில் தொடக்கக்கல்வியை முடித்த பிறகு இடைநிலைக் கல்வி கற்கவும் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளவும் திருச்சிக்கு மாற்றலாகியுள்ளார்.
பிடெக் மின் பொறியியல் படிப்பை முடித்த பிறகு 1966ம் ஆண்டு பின்னி மில்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. இந்த சமயத்தில்தான் கணிதம் மீதும் அதைக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது.
”அந்த சமயத்தில் எனக்கு திருமணமாகாத காரணத்தால் பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. நிறுவனத்தில் பணியாற்றிய பல்வேறு ஊழியர்கள் பொறியியல் தொடர்புடைய கணிதப் பாடங்கள் கடினமாக இருந்ததால் AMIE முடிக்கமுடியாமல் அவதிப்பட்டனர். நான் இலவசமாக வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
கணிதமே வாழ்க்கையாக மாறியது
ஓராண்டிற்குப் பிறகு அவர் பெங்களூரு மாற்றலானார். இந்திய தொலைபேசி நிறுவனத்தில் (ITI) பணியில் சேர்ந்தார். 2000ம் ஆண்டு வரை இங்கு பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார்.
”ஐடிஐ காலனியில் தங்கியபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தில் நிறுவன ஊழியர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கினேன். பின்னர் பிஎம்எஸ் பொறியியல் கல்லூரியிலும் அதன் பிறகு ICWAI, பொறியாளார்களுக்கான இன்ஸ்டிட்யூட், பெங்களூரு சாப்டரிலும் பின்னர் தொலைதொடர்பு பொறியாளர்கள் நிறுவனத்திலும் கணக்கு மற்றும் கணக்கு தொடர்புடைய பாடங்களைக் கற்றுக்கொடுத்தேன். 2000ம் ஆண்டு எனது பணியை விட்டு விலகும்வரை இது தொடர்ந்தது,” என்றார்.
கணிதம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாராயணசாமி பகிர்ந்துகொண்டார். அவர் விவரிக்கும்போது,
“நான் பெங்களூருவில் என்னுடைய வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தபோது இளம் வயதுடைய ஒருவர் தச்சு வேலையில் பயிற்சி பெற்று வந்தார். ஒரு நாள் அவர் என்னிடம், ‘பலர் இங்கே அமர்ந்து கணிதம் கற்றுக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இந்த பாடம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் நான் கணக்கு பாடத்தை சரியாகப் படிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள். வீடு திரும்பியதும் என் பெற்றோரும் அடிப்பார்கள். ஒரு முறை நான் மனமுடைந்து என்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறிவிட்டேன். அடுத்த நாள் நான் பெங்களூரு வந்தடைந்ததைத் தெரிந்துகொண்டேன். நான் ஓடத் தொடங்கினேன். ஆனால் பசியால் மயங்கி விழுந்துவிட்டேன்.
அன்புள்ளம் கொண்ட முனுசாமி என்கிற தச்சர் என்னை வீட்டிற்கு அழைத்து சென்று உணவு கொடுத்தார். அவர்தான் என்னை வளர்த்து இந்தக் கலையையும் கற்றுக்கொடுத்தார். கணிதப் பாடத்தால்தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்,” என்றார்.
பாடம் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறை குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது வகையீட்டு சமன்பாட்டிற்குத் தீர்வு காண்பதைவிட இந்தக் கேள்வி கடினமானது என்றார்.
நீங்கள் இந்தப் பாடத்தை அணுகும் முறையே இதில் ஆர்வத்தையோ வெறுப்பையோ ஏற்படுத்தும் என்றார்.
“நான் ஆசிரியராக பொறுப்பேற்றபோது மிகவும் கண்டிப்பான ஆசிரியராக இருந்தேன். என்னுடைய வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் இருப்பது எனக்குப் பிடிக்காது. மழையோ வெயிலோ அனைத்து வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் நான் வகுப்பெடுக்கச் சென்றுவிடுவேன்,” என்றார்.
இது தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் நினைவுகூர்ந்தார். “என் வகுப்பில் அன்னபூர்னா என்கிற 28 வயதான பெண் ஒருவர் படித்தார். அவர் AMIE தேர்வுகளில் கணிதப் பாடத்தில் நான்கு முறை முயற்சி செய்தும் தேர்ச்சி பெறவில்லை. ஐந்தாவது முறை தேர்வெழுதுவதற்கு முன்பு என்னுடைய வகுப்பிற்கு வர தீர்மானித்தார்.
அவருக்குத் திருமணம் முடிந்து தலை தீபாவளி நெருங்கிய சமயத்தில் என்னிடம் வந்து அந்த குறிப்பிட்ட நாளன்று தன்னால் வகுப்பிற்கு வர இயலாது என தெரிவித்தார். என்னுடைய வகுப்பை புறக்கணிக்கக்கூடாது என்றும் அதற்கு பதிலாக புகுந்த வீட்டினரை ஹைதராபாத்தில் இருந்து வரவழைக்குமாறும் வலியுறுத்தினேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவரது புகுந்த வீட்டினர் வந்தனர். அவரும் வகுப்பிற்கு வந்தார். நாங்கள் பண்டிகையைக் கொண்டாட பட்டாசு வெடித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டோம். அவர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்,” என்றார்.
தடைகளைக் கடந்து செயல்படுகிறார்
நாராயணசாமி 2000-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வசித்து வந்த தனது குழந்தைகளுடன் செல்ல விரும்பினார்.
“நான் ஓராண்டு காலம் அமெரிக்காவில் வசித்தேன். மிகவும் சலிப்பாக இருந்தது. நான் சிறப்பாக செய்துகொண்டிருந்த பணியைத் தொடர்வதற்காக திரும்பி வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என்றார்.
2018-ம் ஆண்டு அவர் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு எலும்பு அடர்த்திக் குறைவு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக தினமும் ஊசி போட்டுக்கொள்கிறார். எனினும் அன்றாடம் அவர் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளைத் தொடர இது தடையாக இருக்கவில்லை.
அவருக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் செயல்படத் தேவையான உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உறுதியளித்தார். வயது என்னவாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படுவது முக்கியம் என்பதே நாராயணசாமியின் திடமான கருத்து.
“மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். அருகிலிருக்கும் வங்கியில் பலர் பண பரிவர்த்தனை செய்ய உதவுகிறேன். மருந்து தேவையிருப்போர் அவற்றை வாங்க உதவுகிறேன். சில தன்னார்வலப் பணிகளில் ஈடுபடுகிறேன். என் மனைவி மற்றும் குழந்தைகளின் ஆதரவினாலேயே இவை சாத்தியமாகிறது,” என்றார்.
கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு மாறியபோது ஏற்பட்ட சம்பவம் ஒன்றை அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
“என்னுடைய கணித ஆசிரியர் பிச்சுமணி ஐயர் வகுப்பில் வைத்த தேர்வில் நான் முழு மதிப்பெண்கள் பெற்றேன். இதற்காக என்னைப் பாராட்டிய அவர் எனக்கு எட்டணா வெகுமதி வழங்கினார். கிராமப் புற பள்ளியில் இருந்து நகருக்கு படிக்க வந்திருந்த நிலையிலும் நான் நன்றாக படிப்பதாக வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களிடம் கூறினார். அந்த எட்டணாவை நான் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன்.
“நான் என் வாழ்நாளில் சம்பாதித்த தொகை எவ்வளவு அதிகமாக இருப்பினும் இந்த எட்டணாவின் மதிப்பு அதிகம் என்பதால் இதைப் பாதுகாத்து வருகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா