ஜூன் 8 திறக்கிறது திருப்பதி கோவில்; பக்தர்கள் தரிசிக்க வழிகாட்டுதல் இதோ!
ஜூன் 11 முதல் தினமும் காலை 6.30 முதல் மாலை 7.30 வரை 6500 பக்தர்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தரிசனம் செய்ய அனுமதி.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குக் காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் 80 நாட்களுக்குப் பிறகு ஜூன் 8-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, இணை அதிகாரி பசந்த் குமார் ஆகியோருடன் இணைந்து திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். திருப்பதி கோவில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
ஜூன் 11ம் தேதி முதல் பொதுமக்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கமுடியும் என தெரிவித்த அவர், அதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஜூன் 8 முதல் தொடங்கும் என்றார்.
எப்போதும் கூட்டத்துடன் இருக்கும் திருப்பதி ஏழுலையில் பெருமாளை தரிசிக்க ஒரு நாளைக்கு சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். ஆனால் தற்போது ஊரடங்குக்குப் பிறகு திறக்கப்படும் திருப்பதி கோவிலுக்குள் ஒரு நாளைக்கு 6500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
“ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இப்படி நாள் முழுதும் 13 மணி நேரத்துக்கு மொத்தமாக 6500 பக்தர்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்,” என தர்மா ரெட்டி தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழலில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பின்பற்றவேண்டிய முக்கிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் இதோ:
- திருமலாவில் ஜூன் 8-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் ஸ்ரீவாரி தரிசனம் தொடங்கப்பட உள்ளது.
- தினமும் காலை 6.30 முதல் மாலை 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
- சோதனைகட்டமாக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட உள்ளது. இவர்கள் இணையம் மூலம் புக் செய்துகொள்ளலாம். அரசு வழிகாட்டுதல்களின்படி 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
- ஜூன் 10-ம் தேதி உள்ளூர் மக்கள் 500 பேருக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் பெறுவதற்கான டோக்கன் திருமலா கவுண்டரில் வழங்கப்படும்.
- ஜூன் 11-ம் தேதி முதல் 3,000 பேருக்கு ஆன்லைனில் 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் வழங்கப்படும். இதற்கான புக்கிங் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது.
- கிராமப்புறங்களில் இருந்து வரும் பக்தர்களும் கட்டாயம் ஆன்லைனில் புக் செய்யவேண்டும். இவர்கள் புக் செய்ய உதவும் வகையில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- தினமும் 3,000 சர்வ தர்சன டிக்கெட்களும் திருப்பதியில் வழங்கப்படும்.
- விஐபி பிரேக் தரிசனம் ஜுன் 11-ம் தேதி முதல் தொடங்கப்படும்.
- பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அலிபிரி வழியாக செல்லும் பாதை மட்டும் அனுமதிக்கப்படும். ‘ஸ்ரீவாரி மெட்டு’ பகுதி மூடப்பட்டிருக்கும்.
- இரண்டு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மலைப்பாதைகளிலும் செல்ல காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும்.
- மூலவர் தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
- சுவாமி புஷ்கரினி மூடப்பட்டிருக்கும். தீர்த்தம் வழங்குவதும் சடாரி வைக்கப்படுவதற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- உண்டியல் துணி மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஸ்ரீவாரி உண்டியல் அருகே பக்தர்களுக்கு மூலிகை சானிடைசர் வழங்கப்படும்.
- அலிபிரி சுங்கச்சாவடி அருகே ஒவ்வொரு பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்படும்.
- 24 மணி நேரத்திற்கு ஒரு அறையில் இரண்டு பக்தர்கள் மட்டுமே தங்கமுடியும்.
- சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு திருமலை திருமண மண்டபத்தில் 50 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
- முகக்கவசம் அணிந்துகொள்வது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் குறித்து தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.
- மாத்ருஸ்ரீ தரிகொண்டா வேங்கமாம்பா அன்னதான கூடம் மட்டுமே காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும்.
- பக்தர்களுடன் தொடர்பில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் தயாராக உள்ளது.
- தினமும் சுமார் 200 பக்தர்களுக்கு கோவிட்-19 ரேன்டம் பரிசோதனை செய்யப்படும். கோவிட்-19 பரிசோதனைகளுக்கான சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
- சோதனை முடிவுகளில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டால் அரசு வழிகாட்டல்களைப் பின்பற்றுவதாக பக்தர்கள் உறுதியளித்து ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும்.
- கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் தரிசன டிக்கெட் புக் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.