குழந்தைகள் உரிமைக்காக போராடும் ட்ரக் ஓட்டுநர் மகள்!
இந்நிறுவனத்தின் முயற்சியால் இதுவரை 700க்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணம் என்பது இன்றளவும் தொலைதூர கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைத் திருமணம் மற்றும் இதர சமூக சீர்கேடுகளுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார் ஹரியானாவின் தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு வயதான அஞ்சு வர்மா.
இவர் குழந்தைகள் நலன் தொடர்பாக செயல்படும் Buland Udaan என்கிற நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனத்தின் முயற்சியால் இதுவரை 700க்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. அஞ்சு சுமார் 15 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுத்துள்ளார். பெண் சிசுக்கொலை சம்பவம் ஒன்றையும் தடுத்துள்ளார்.
’நியூஸ் 18’ உடனான உரையாடலில் அஞ்சு கூறும்போது,
”என்னுடைய கிராமத்தில் பெண்கள் சல்வார் தவிர வேறு உடைகள் அணிய அனுமதிக்கப்படுவதில்லை. அப்பாவின் கண்களை நேருக்கு நேர் பார்க்கவோ தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் உள்ள பகுதியில் குழந்தைகள் மீதான கொடுமைகளை எதிர்த்து போராடத் தீர்மானித்தேன்,” என்றார்.
அஞ்சு ட்ரக் ஓட்டுநரின் மகள். பள்ளியில் சேர்ந்த ஒவ்வொரு மாணவரும் சிறந்த மதிப்பெண்கள் வாங்குவதை இவர் உறுதிசெய்கிறார். இதுவரை இந்த மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வுகளில் 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அஞ்சு கிராமத்தலைவரின் உதவியைப் பெற்றுக்கொண்டார்.
”மாணவர்கள் முறையாகக் கல்வி கற்பதை உறுதிசெய்ய கிராமத் தலைவரும் நானும் திட்டமிட்டோம். குழந்தைகள் நன்றாகப் படிப்பதைக் கண்டு மற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பாராட்டுகள் கிடைத்தது. அதேசமயம் பெண் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்து அவர்களது பெற்றோர்களுக்குப் புரியவைத்தோம்,” என தெரிவித்ததாக நியூஸ் 18 குறிப்பிட்டுள்ளது.
இளம் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைக்கு போராடவேண்டும் என்பதில் அஞ்சு முக்கியக் கவனம் செலுத்தினார். இதுபோன்ற பிரச்சனைகளை அஞ்சுவே தனது இளம் வயதில் சந்தித்துள்ளார். அவருக்கு ஐந்து வயதிருக்கையில் விடுமுறையின்போது அவரது அத்தை வீட்டிற்கு செல்வார். அப்போது வீட்டு வேலைகள் அனைத்திலும் அவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடவேண்டும். பத்து வயதிலேயே சுமார் 15 நபர்களுக்கு தேநீர் தயாரித்துள்ளார் அஞ்சு. காய்கறிகள் வெட்டுவது, வீட்டை சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
”எனக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாது என்பதற்காக என் அத்தை என்னை அவமானப்படுத்தியுள்ளார். தவறு செய்யும் ஒவ்வொரு நாளும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இரவு வெகு நேரம் கழித்து பாத்திரங்களைத் தனியாக சுத்தப்படுத்தியுள்ளேன். அனைத்து பணிகளையும் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள். உடலை மசாஜ் செய்யும் வேலைகளைக்கூட செய்துள்ளேன். அந்த மோசமான அனுபவங்கள் கற்பனைக்கும் எட்டாதது. பணியாள் போன்றே நான் நடத்தப்பட்டேன்,” என்று தெரிவித்ததாக ’தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிட்டுள்ளது.
அஞ்சு எப்படியோ தனது அப்பாவுடன் அத்தை வீட்டிலிருந்து தப்பினார். அந்த சமயத்தில்தான் குழந்தைகள் நலனில் பங்களிக்கவேண்டும் என்பதை உணர்ந்தார். அப்போதிருந்து பல குழந்தைகளுடன் உரையாடி, அவர்களது பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் சார்பாக முறையிடுகிறார்.
தற்போது அஞ்சு ஒரு வெற்றிகரமான சமூக ஆர்வலர். டெட் பேச்சாளர். ஏழு உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட Buland Udaan முயற்சியில் தற்போது 20 உறுப்பினர்கள் உள்ளனர். இவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் இவரது பெற்றோர் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்கின்றனர்.
“என் அப்பா ராஜேந்திர குமார் ட்ரக் ஓட்டுநர். ஒரு மாதத்திற்கு 20,000 ரூபாய் வருவாய் ஈட்டினாலும் எனக்காக மாதம் 10,000 ரூபாய் ஒதுக்கிவிடுவார். என்னுடைய முயற்சியில் மட்டும் நான் கவனம் செலுத்தினால் போதும் என்பார். நிறுவனத்தின் மூலம் பல குழந்தைகளின் வாழ்க்கையில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்,” என தெரிவித்ததாக ’தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA