ரூ.1.74 லட்சத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இரு சிறைக் கைதிகள்!
வெளியில் நடமாடுபவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல. சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளும் அல்ல என பேச்சுவழக்கில் கூறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில் நிஜமாகியுள்ளது.
வெளியில் நடமாடுபவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல. சிறையில் அடைபட்டிருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளும் அல்ல என பேச்சுவழக்கில் கூறப்படுவதுண்டு. இதனை மெய்ப்பிக்கும் வகையிலான சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
சிறைக் கைதிகளைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய எண்ணெய் கழகத்தின் (Indian Oil Corporation) சார்பில் சுதந்திர பெட்ரோல் பங்க்குகள் (Freedom Filling Stations) தமிழக சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக்கைதிகள் 3 ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதுபோன்ற பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
இதில் நவ. 10ஆம் தேதி நள்ளிரவு நடைப்பெற்ற சம்பவம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல, அவர்களுக்கும் நல் உள்ளம் உண்டு, நேர்மையான செயல்பாடுகள் உண்டு என நிரூபித்துள்ளனர் அந்த பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் விஜயகுமார் (கொலை வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்) மற்றும் கார்த்திக் (திருட்டு வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்) என்ற இரு குற்றவாளிகள்.
இவர்கள் இருவரும் நவ. 10ஆம் தேதி நள்ளிரவு பணியில் இருந்தபோது, பெட்ரோல் நிரப்ப இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விட்டுச் சென்ற ஓர் பையை கண்டெடுத்தனர். அதனை திறந்து பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், உள்ளே கத்தை கத்தையாக ரூ. 1.74 லட்சம் ரூபாய் ரொக்கம், நவீன செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்தன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றவாளிகளான போதும், அவர்களின் நல்உள்ளம் அந்த பிறரின் பணம் மற்றும் உடைமையின்மேல் ஆசை கொள்ளவில்லை. உடனே அதனை எடுத்துச் சென்று தங்கள் மேலதிகாரியிடம் ஒப்படைத்தனர் விஜய்குமார் மற்றும் கார்த்திக்.
இச்சம்பவம் குறித்து முதுநிலை தலைமை சிறைக்காவலர் மரியதாஸ் ஐஏஎன்எஸ் செய்தியாளர்களிடம் கூறியது,
அவர்கள் இருவரும் நேர்மையாக அந்த பையை கொண்டு வந்து ஒப்படைத்தனர். அப்போது, அதில் இருந்த செல்போனுக்கு ஓர் அழைப்பும் வந்தது. அந்த அழைப்பையேற்று பேசியபோது, பையை தவற விட்ட இளைஞர்களைப் பற்றிய தகவல் கிடைத்தது.
அதேநேரத்தில் பையை தவறவிட்ட அந்த இளைஞர்களும் தங்களது பையைத் தேடி அங்கு வந்தனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி அவர்களின் உடைமைகளை சரி பார்க்கச் சொன்னோம். மேலும், மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, மறுநாள் காலையில் அலுவலகத்தில் வந்து உடைமைகள் மற்றும் பணத்தை பெற்றுச் செல்லும்படி அறிவுறுத்தினோம். அவர்களும் மறுநாள் வந்து பணத்தையும், பையையும் பெற்றுச் சென்றனர், என்றார்.
இதுகுறித்து அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான விஜயகுமார் கூறியதாவது,
"உணர்ச்சிகளுக்குள்பட்டு, சந்தர்ப்ப வசத்தால் குற்றமிழைத்து, அதன் காரணமாக நீண்ட காலமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கே இங்கு பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் அனைத்து கைதிகளும் நல்ல மனமுடையவர்கள். இதனால் அவர்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணத்தை எளிதில் சம்பாதித்துள்ளனர். மேலும்,
“இதுபோல வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவது இது முதல் முறையல்ல. இதேபோல ஏற்கெனவே, பல்வேறு தடவைகளில் ரூ. 5 ஆயிரம், 10 ஆயிரம் என தவறவிட்ட பணம் திருப்பி அளிக்கப்பட்டு இருக்கிறது. சில நேரங்களில் அடையாள அட்டை, ஏடிஎம் கார்டு போன்றவற்றையும் கண்டெடுத்து அளித்துள்ளோம்,” என்கிறார்.
இங்கு பணிபுரியும் கைதிகள், வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நல்லெண்ணத்தை சம்பாதித்துள்ளதாக இந்திய எண்ணெய் கழக அதிகாரி ஒருவரும் கைதிகளை பாராட்டி கருத்து தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் இத்தகைய நேர்மையான நடவடிக்கைகள் முலம் அவர்கள் நல்ல மனமாற்றத்தக்கு உள்ளானது தெரியவருகிறது. இவர்களின் இத்தகைய நல்ல மனமாற்றத்தை தமிழக சிறைத் துறையின் இத்திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் கருதலாம்.
செய்தி உதவி - Ani, outlook