விஜயனின் கடைசி பயணம்: மனைவியுடன் 25 நாடுகள் சுற்றி வந்த கேரள டீக்கடைக்காரர் மரணம்!
மாரடைப்பால் விஜயன் மரணம்!
கேரளா, கொச்சினில் ஸ்ரீ பாலாஜி என்னும் சிறய டீக்கடை வைத்திருக்கிறார் 69 வயதான விஜயன். தானும் தன் மனைவி மோகனாவும் (67) கடந்த 56 வருடங்களாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒரு சேர வேலையையும் வாழ்க்கையையும் துவங்கிய இவர்களின் ஒரே கனவு உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்பது மட்டும் தான்.
இந்த கனவு விஜயனின் தந்தை, மூலமாக வந்தது. சிறுவயதில் விஜயனின் தந்தை தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுதிலிருந்தே பயணத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன்படி, வெளிநாட்டுக் கனவை நிறைவேற்றவே டீக்கடை அமைத்து மனைவியுடன் உழைத்து வந்தார்.
டீக்கடை மட்டுமே இவர்களின் ஒரே வருமானம்; அதிலிருந்து வெளிநாடுகள் செல்லும் அளவிற்கு லாபம் கிடைக்க வில்லை என்றாலும் ஒரு நாளுக்கு 300 ரூபாய் என சேமித்து தங்களின் உலகம் சுற்றும் கனவை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆடம்பரச் செலவுகள் இன்றி அவர்கள் அன்றாட செலவுகளை குறைத்துக் கொண்டு பணம் சேமித்து, வங்கியில் இருந்து கடன் பெற்று ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று வந்தனர். ஒரு நாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் 3 வருடத்திற்குள் கடனை அடைத்துவிட்டு மீண்டும் சேமிப்புகளைத் துவங்கி மீண்டும் வங்கிக் கடன் பெற்று அடுத்த நாட்டுக்கு செல்லத் தயாராகின்றனர்.
இதுவரை சிங்கப்பூர், அர்ஜென்டினா, பெரு, சுவிட்சர்லாந்து, பிரேசில், துபாய் நாடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். விஜயனின் ஆசையை உணர்ந்த பலர் தம்பதிக்கு ஸ்பான்சர் செய்து வந்தனர். இப்படி உலகம் சுற்றும் வாலிபராக இருந்த விஜயன் இன்று உயிருடன் இல்லை.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த விஜயன் இன்று மாரடைப்பால் காலமானார். காலை மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே கொச்சியில் உள்ள ஸ்ரீ சுதீந்திரா மருத்துவ மிஷனில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஜயனின் பேரன் மஞ்சுநாத் அவரின் இறப்பை மீடியாக்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 14 ஆண்டுகளில், பயணத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட விஜயன் தம்பதி, ஆறு கண்டங்களில் உள்ள 25 நாடுகளுக்குச் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் சுற்றுலாத் துறையை கிட்டத்தட்ட ஸ்தம்பிக்க வைத்த போதிலும், இருவரும் அக்டோபரில் ஒரு வாரம் ரஷ்யாவிற்கு சென்று வந்தனர்.
மோகனாவுக்கும் தனக்கும் 20 வயதில் திருமணம் நடந்ததாகவும், அப்போது எங்கும் செல்ல முடியவில்லை என்றும், அதனால் அவர்கள் 60 வயதில் பயணம் செய்ய முடிவு செய்ததாகவும் விஜயன் மக்களிடம் கூறுவார்.
2015 இல் இவர்களின் வாழ்க்கை ’கண்ணுக்கு தெரியாத சிறகுகள்' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. சில சமயங்களில் விஜயன் - மோகனா தம்பதியின் பயணங்களில் அவர்களது குடும்பத்தினர் உடன் செல்வது வழக்கம். சீனா செல்லும்போது இருவர் மட்டுமில்லாமல், விஜயனின் இரண்டு மகள்கள், மருமகன்கள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்றனர்.
ஆனால், இன்று விஜயன் தனது இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் போது, மோகனா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல், அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும் நலம் விரும்பிகளின் பயணிகளும் கூட இருக்கிறார்கள். விஜயனின் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவரை பின்பற்றுபவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தகவல் உதவி: The NewsMinute | தமிழில்: மலையரசு