4 ஆண்டுகளில் யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்டு வைரல் ஆன சுவாரசியக் கட்டுரைகள்!
தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் சாதாரணமானவர்களின் சாதனைகளையும் சரித்திரமாக்கி, உலகம் முழுவதும் கொண்டு சென்ற சில கட்டுரைகள்!
யுவர் ஸ்டோரி தமிழ் தனது 5ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் சாதாரணமானவர்களின் சாதனைகளையும் சரித்திரமாக்கி, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் மகத்தான பணியை யுவர் ஸ்டோரி தமிழ் செய்து வருகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.
இந்த மகத்தான தருணத்தில் சென்னையில் இருப்பவர்களுக்கே தெரியாத பல்லாவரம் சந்தை, சேலத்தில் இருக்கும் பாப்அப் தமிழச்சி அடுப்பங்கரை கார கறி விருந்து, திருவண்ணாமலை தம்பதியின் மினியேச்சர் சமையல், ஈரோடு இட்லி சந்தை மற்றும் தனது கிராமிய சமையலால் உலகின் கவனத்தை ஈர்த்த ஆறுமுகம் டாடி போன்றோரின் கதைகள் மிகவும் வைரலாகி, அதிக வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. அவற்றை மீண்டும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
பாமர மக்களின் பல்பொருள் அங்காடியான ’பல்லாவரம் சந்தை’
முகம் பார்க்கக்கூட நேரமின்றி அனைவரும் அரக்கப்பரக்க ஓடிக் கொண்டிருக்கும் சென்னையின் இயந்திரமயமான வாழ்க்கையில் பல்லாவரம் சந்தை ஓர் விதிவிலக்கு. இங்கு நின்று நிதானித்து, தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேடி, அதற்கு சரியான விலை கொடுத்து வாங்கிச் செல்லும் மக்கள் கூட்டம்.
1815ல் மாட்டுச் சந்தையாக தன் அடையாளத்தை தொடங்கிய பல்லாவரம் சந்தை, இன்று சென்னை மக்களுக்கு அம்மா, அப்பாவைத் தவிர அனைத்துப் பொருள்களையும் குறைந்த விலையில் அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாக விளங்கி வருகிறது.
காலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை நடைபெறும் இச்சந்தையில் ஆடு, கோழி, மாடு, காய்கறிகள், மூலிகைகள், கீரைகள், பூச்செடிகள், கருவாடு, சோப்பு, சீப்பு, கண்ணாடி, செல்போன், டிவி, கட்டில், சோபா, கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், பழங்காலப் பொருள்கள் என கிடைக்காத பொருள்களே இல்லை என நாம் துணிந்து கூறலாம். அந்தளவுக்கு இங்கே அனைத்து பொருள்களும் குவிந்து கிடக்கின்றன விற்பனைக்கு.
இது வெள்ளிக்கிழமை சந்தை என்பதால் வியாழக்கிழமை இரவே கூட்டம் களைகட்ட ஆரம்பித்து விடுகிறது. பல்லாவரம் ஜனதா தியேட்டர் பின்புறம் உள்ள, கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்குச் சொந்தமான சாலையில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த சந்தை தற்போது பல்லாவரம் CSI சர்ச்சுக்கு பின்புறம் மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க, சந்தைக்குப் போங்க, தேவைப்படுறத தேடிப் பிடிங்க, பேரம் பேசுங்க, சந்தோஷமா அள்ளிக்கிட்டு போங்க…
மேலும் அறிய தொடரவும்
ரூ.499க்கு காரசார கறி விருந்து வழங்கும் பாப்அப் தமிழச்சி அடுப்பங்கரை
மூன்றரை அடி தலை வாழை இலையில் நாட்டுச் சக்கரை பொங்கல், முட்டை தொக்கு, இரத்தப் பொறியல், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி சுக்கா, தலைக்கறி, போட்டி வறுவல், இஞ்சிக்கார கறி, காடை வறுவல், மீன் வறுவல், சிக்கன் 65 போன்லெஸ், லாலிபாப் சிக்கன், மூளை வறுவல், இறால்/ நண்டு தொக்கு, மீன் தொக்கு, மட்டன் சீரக சம்பா பிரியாணி, சாதம், மட்டன் சுக்கா குழம்பு, போட்டி குழம்பு, நண்டு குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, தலைக்கறி குழம்பு, இஞ்சி எலும்புச் சாறு, ரசம், தயிர், மோர், நன்னாரி சர்பத், தேன் குல்கண்டு ஸ்வீட் பீடா என அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது ஓர் உணவகத்தில். நினைத்து பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா…
சேலம் மாவட்டம், வாழாப்பாடி பைப்பாசில் முத்தம்பட்டி எனும் ஊரில் உள்ள ‘பாப் அப் தமிழச்சி அடுப்பங்கரை ' உணவகத்தில் தான் இந்த சுடச்சுட கமகம காரசாரமான கறிவிருந்து. ஆனால் நினைத்த நேரத்தில் போய் உணவருந்த முடியாது. ஓர் நாளைக்கு 40 பேருக்கு மட்டும்தான் மதிய விருந்து. எனவே முதல் நாளே இங்கு விருந்துக்கு முன்பதிவு செய்யவேண்டும். அதிலும் புதிதாக திருமணமான தம்பதி என்றால் அவர்களுக்கு ஜோடி இலை. அதாவது ஓர் இலையில் இருவருக்கு விருந்து.
எனது உணவகத்துக்கு வருபவர்கள் இயற்கையான சூழலில் உணவருந்திவிட்டு, வயிறும், மனமும் நிறைந்து செல்வதே என் நோக்கம் என்கிறார் பாப்அப் தமிழச்சி அடுப்பங்கரையின் நிறுவனர் சிலம்பரசன்.
ஹலோ ஹலோ எங்க கிளம்புறீங்க… ஓ பாப்அப் தமிழச்சி அடுப்பங்கரையில் கறி விருந்தை ஓர் பிடி பிடிக்கவா…ஓ.கே. என்ஜாய்.
செப்பு சாமானில் ஓரிஜனல் சமையல் - யூடியூபில் அசத்தும் தம்பதி
திருவண்ணாமலை அருகே தனிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராம்குமார்-வளர்மதி தம்பதி. குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் சிறு செப்பு சாமான்களைப் பயன்படுத்தி, நிஜமாக சமையல் செய்து யூடியூபில் பிரபலம் அடைந்துள்ளனர்.
வளர்மதியின் யோசனைபடி 'தி டைனி ஃபுட்ஸ்' என்னும் யூடியுப் சேனலை தொடங்கிய இத்தம்பதி, சமையல் செய்யும் பாத்திரத்தில் இருந்து, காய்கறி நறுக்கும் கத்தி வரை சகலமும் சிறிய பொம்மை பாத்திரங்களாகவே உள்ளன. ஆனால் இவர்கள் இந்த பொம்மை செப்புச் சாமானில் செய்யும் உணவு வகைகளை பார்த்தாலே நாவூறும் வகையில் உள்ளது.
திருவண்ணாமலையில் சுற்றியுள்ள ஏதேனும் வயல்வெளியைத் தேர்ந்தெடுத்து சமைத்து படம் பிடிக்கின்றனர். சமையல் செய்யும் முன் கிராமிய சுற்றுப்புறத்தை விளையாட்டுச் சாமான்களைக் கொண்டு உருவாக்குகிறார் ராம்குமார். அதன்பின் வளர்மதி சமையல் செய்கின்றார். இதற்கு குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும் என்கிறன்றனர் தம்பதியினர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் புது வீடியோக்களை இவர்கள் அப்லோட் செய்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இச்சேனலுக்கு தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களும், 15,000-க்கும் மேலான சப்ஸ்க்ரைபர்ஸும் உள்ளனர். இந்தியாவின் முதல் மினியேச்சர் சமையல் இது என்பதால் இந்த அமர்க்கள வரவேற்பு.
இந்த மினியேச்சர் சமையலால் வயிறு நிறையுதோ இல்லையோ, மனசு கண்டிப்பா நிறையும்…
நாடுகளை கடந்து மணம் பரப்பும் மல்லிகைப் பூ இட்லிக்கள்…
தென்னிந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஓர் உணவுப் பொருள் இட்லி, சட்னி, சாம்பார் தான். வெளிநாட்டவர் இந்தியா வந்தாலும் கேட்டு வாங்கிச் சுவைப்பது இட்லியைத்தான். நம்மவர்கள் வெளிநாடு சென்றாலும், தேடிப் பிடித்து வாங்கிச் சாப்பிடுவதும் இட்லியைத்தான். பச்சிளங்குழந்தைகள் முதல் பல் போன பாட்டி வரை அனைவரின் விருப்ப உணவாக இருப்பதும் இட்லிதான்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இங்கு நாளொன்றுக்கு சாதாரணமாகவே சுமார் 20 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது. அதிலும் ஸ்பெஷல் ஆர்டர் என்றால் இட்லி விற்பனை லட்சங்களைத் தொடுமாம்.
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கே இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மை.
தினந்தோறும் அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் இவர்களது இட்லி வியாபாரம் இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. மொத்த ஆர்டரின்பேரில் இட்லிகளை தயாரித்து விற்பனை செய்யும் இவர்கள், சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மல்லிகைப் பூப்போல மிருதுவாக, ஆவி பறக்க பல்வேறு சட்னிகள் அணிவகுக்கும் இட்லியை சுவைத்து மகிழாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஈரோடு பக்கம் போன கொஞ்சம் இந்த இட்லி சந்தைக்கும் போய் 4 இட்லியை ருசி பார்த்துட்டு வாங்களேன்…
யூடியூபில் கிராமிய சமையல்- லட்சங்களில் சம்பாதிக்கும் ’ஆறுமுகம் டாடி’
திரைப்பட உதவி இயக்குநர் கோபிநாத். இவரது யூடியூப் சேனல் 'தி வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி'. திருப்பூரில் வசிக்கும் ஆறுமுகம் - செல்வி தம்பதியின் மகனான இவர், தனது தந்தையை வைத்து எளிமையான முறையில் உருவாக்கிய கிராமிய சமையல் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தார்.
தற்போது இந்த வீடியோக்களால் உலகம் முழுவதும் 'டாடி' என்று பிரபலமாகி விட்டார் ஆறுமுகம். இவர்தான் இந்தச் சேனலின் கதாநாயகன். தற்போது பல வீடியோக்கள் கொண்டுள்ள வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி சேனலின் முதல் வீடியோ நண்டு கறி செய்முறை. முதல் வீடியோ என்பதால் இரண்டு நாள்களில் சேனல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2,000-ல் இருந்து 3,000 ஆயிரமாக உயர்ந்தது.
பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் குறைந்தபட்சம் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடப்பதே இந்தச் சேனலின் சாதனை. மேலும் இந்த சேனலை நாள் ஒன்றுக்கு 1700 பேர் புதிதாக சப்ஸ்கிரைப் செய்வதாகவும், ஒரு மாதத்துக்கு 60 ஆயிரம் பேர் பதிவு செய்வதாகவும் கோபிநாத் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
”நாங்கள் இதுவரை தயாரித்து பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்க்கும் சந்தாதார்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது மாதம் சுமார் ரூ.2 லட்சம் வரை இதில் வருமானம் வருகிறது,” என பெருமையுடன் கூறுகிறார்.
நீங்களும் உங்க டாடியை வைத்து இப்படி முயற்சி பண்ணலாமே…பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல…