மொய் எழுத கியூஆர் கோட்; கூகுள் பே மூலம் திருமணப் பரிசு: மதுரை டிஜிட்டல் திருமணம்!
மதுரையில் நடைப்பெற்ற டிஜிட்டல் திருமணம்!
அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் மொய் எழுதும் இடத்தில் கூகுள் பே மற்றும் போன்பே கியூ ஆர் கோட்கள் வைக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இப்படியொரு ஐடியா இருக்குல்ல! என்று வியப்படைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் தொழில்கள் தொடங்கி மக்களின் வாழ்வாதாரமே முடிங்கியிருந்த நிலையில், தற்போது மக்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமணங்கள், இப்போது தான் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றன. இந்த திருமணங்களின் போது அன்புக்குரியவர்களின் கிஃப்ட் மற்றும் பணத்தை பெறுவதற்கு மாற்று வழிகளையும் திருமணவீட்டார் கண்டறிந்துள்ளனர்.
கிஃப்ட்டுகள், பணம் ஆகியவற்றை நேரடியாக பெறுவதை பலரும் அனுமதித்தாலும், கொரோனா பயம் காரணமாக சிலர் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளனர். நேரடி தொடர்பு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிவெடுத்துள்ளனர். மதுரையில் நடந்த திருமணமும் அப்படித்தான் இருந்தது.
மதுரையில் உள்ள ஈவண்ட் மேனேஜர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தற்போது தான் திருமணங்களுக்கான அலங்காரம் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் இருக்கும் மக்கள் அனைவரும் தங்களை டிஜிட்டல் யுகத்துக்கு தயார்படுத்திக் கொண்டனர். ஒருத்தரிடமிருந்து மற்றொருத்தருக்கு பண பரிமாற்றம் செய்ய வங்கிகளுக்கு செல்லவேண்டிய காலம் மாறி இப்போது, மொபைல் ஆப் மூலம் சில நிமிடங்களில் பணத்தை எளிதாக மாற்றமுடியும். கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாக பணத்தை மாற்ற முடியும்.
மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் திருமண விழாவின் போது மொய் பணத்தை பெறுவதற்காக புதிய முறையை கையாண்டனர். அவர்கள் உறவினர்களுக்கு கொடுத்த திருமண அழைப்பிதழ்களில் தங்கள் Google Pay மற்றும் PhonePe கணக்குகளின் QR குறியீடுகளை அச்சிட்டுள்ளனர்.
இதன் மூலம் திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் எந்த இடையூறும் இல்லாமல் பணத்தை திருமண வீட்டாரின் வங்கிக் கணக்குக்கு எளிதாக செலுத்த முடியும். சொல்லப்போனால் திருமணத்திற்கு நேரில் வர முடியாதவர்களும், இந்த கியூ ஆர் கோட் மூலம் தங்கள் அன்பளிப்பை செலுத்தியுள்ளனர்.
"சுமார் 30 பேர் இந்த வசதியைப் பயன்படுத்தி அவர்களது திருமணப் பரிசாக பணத்தை கொடுத்தனர்," என்று மணமகளின் தாய் டி.ஜே.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
"எங்கள் குடும்பத்தில் இதுபோன்ற ஒரு முயற்சி செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் வைரலாகிய பின்னர், எங்கள் குடும்பத்திற்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. இது குறித்து கேட்டறிய பலரும் எனது மொபைல் எண்ணிற்கு போன் செய்துள்ளனர். இதேபோல், எனது சகோதரருக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன,” என்றார் ஜெயந்தி.