‘காவிரி நதியில் ரசாயனக் கழிவுகள் அதிகளவில் கலந்துள்ளது’ - ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு!
நதிநீரில் கலக்கப்பட்டுள்ள மாசுப்பொருட்களில் மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவைகள், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை அடங்கும்.
ஐஐடி மெட்ராஸின் ஆய்வாளர்கள், காவிரி ஆற்றில் பல வகை மாசுகள் கலப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில், மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை அடங்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இவற்றில், மருந்துப் பொருட்களால் ஏற்படும் மாசுபாடு இந்தியாவில் மிக அதிகம். இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய மருந்து உற்பத்தி நாடாகும். இந்த மருந்துகள் மிகச்சிறிய அளவில் நீர்நிலைகளில் கலக்கப்பட்டாலும் நீண்டகால அடிப்படையில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
டாக்டர் லீஜி பிலிப், நிதா மற்றும் ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் நிறுவனத் தலைவருமான கேஜி கணபதி தலைமையிலான ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் குழு காவிரி ஆற்றில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில்,
காவேரி ஆற்றில் பருவகாலத்தில் மாசுப்பொருட்கள் பரவும் அளவு பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. நதிநீரின் தரத்தை மதிப்பிடுவதால் மாசுபாடு பரவலுக்கான காரணத்தையும் சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மருந்துப் பொருட்களால் மாசுபடுவதைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்பதை ஐஐடி மெட்ராஸ் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நதிகள் போன்ற நீர்நிலைகளில் மாசுபாட்டின் அளவைக் குறைக்க கழிவுநீர் சுத்திகரிப்பும் அவசியமாகிறது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கத்தை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி அவசியம் என்பதையும் இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நீர்த் தொழில்நுட்ப முன்னெடுப்புகள், இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிதியுதவியுடன் இந்த அய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் Science of the Total Environment என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன. ஜெயகுமார் ரெங்கநாதன், இன்ஸமாம் உல் ஹக் எஸ்., காமராஜ் ராமகிருஷ்ணன், மந்திரம் கார்த்திக் ரவிச்சந்திரன், பேராசிரியர் லிகி பிலிப் ஆகியோர் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளைச் சுட்டிக்காட்டிய, டாக்டர் லீகி பிலிப், நிதா மற்றும் ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் நிறுவனத் தலைவருமான கே ஜி கணபதி ஆகியோர்,
"காவிரி ஆற்றின் நீரின் தரத்தை கடந்த இரண்டு வருடங்களாக கண்காணித்து வருகிறோம். மாசுபாடுகள், குறிப்பாக மருத்துவக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பருவகால மாறுபாடுகளைக் கண்காணித்தோம்,” என்கின்றனர். மேலும் கூறிய பேராசிரியர் லிகி பிலிப்,
“ஐஐடி மெட்ராஸ் குழு ஆற்றின் முழு நீளத்திலிருந்தும் 22 இடங்களில் இருந்து தண்ணீர் சேகரித்தது. ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் இடங்களுக்கு அருகில் 11 மாதிரி நிலையங்களையும், நீர் விநியோக அமைப்புகளின் கலக்கும் இடங்களுக்கு அருகில் 11 இடங்களையும் அமைத்தோம். நீர்ப்பிடிப்புத் தளங்களில் உள்ள நீரின் தரமும் கண்காணிக்கப்பட்டது,” என்று விவரித்தார்.
உலகளாவிய நன்னீரில் நதிகள் 0.006% பங்களிக்கின்றன. மேலும், பல்வேறு உள்நாட்டு மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகவும் உள்ளன. உலகெங்கிலும், பல்வேறு மனித செயல்பாடுகளால் நதி அமைப்புகளின் நீர் தரம் மோசமடைந்து வருகிறது. தென்னிந்தியாவில் காவேரி நதிக்கு மனிதர்களின் நடவடிக்கையால் தொடர்ந்து ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
மழைக்காலமானது காவிரி நீரின் தரத்திலும் மருத்துவக் கழிவுகளின் அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தது. மழைக்காலம் முடிந்த பிறகு நதியின் ஓட்டம் குறைகிறது. அத்துடன் பல்வேறு இடங்களிலிருந்து தொடர்ச்சியாக கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றின் காரணமாக மருந்துகள் உட்பட பலவகையான மாசுபாடுகள் அதிகரிப்பதை ஆய்வு உணர்த்துகிறது.
"எங்கள் கண்டுபிடிப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளன. மருந்து அசுத்தங்கள் மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை. நீர்நிலைகளில் வாழக்கூடிய குறிப்பிட்ட உயிரினங்களுக்கு மருத்துவக் கழிவுகள் மிதமான முதல் தீவிரமான பாதிப்பு வரை ஏற்படுத்துவதை எங்கள் குழுவின் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது," என்று பேராசிரியர் லிகி பிலிப் கூறினார்.
ஆர்சனிக், துத்தநாகம், குரோமியம், ஈயம் மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களால் குறிப்பிடத்தக்க மாசு ஏற்பட்டிருந்தது. நன்னீர் உள்வாங்கும் இடங்களில்கூட அதிகளவு மருத்துவ மாசுகள் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்யூபுரூஃபன் மற்றும் டிக்லோஃபெனாக் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள், அடினோலோல் மற்றும் ஐசோபிரெனலின் போன்ற உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள், பெரிண்டோபிரில் போன்ற நொதி தடுப்பான்கள், காஃபின் போன்ற தூண்டு பொருட்கள், கார்பமாசெபைன் போன்ற ஆன்டிடிப்ரஸண்ட்ஸ் மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவை இந்த மருத்துவ மாசுபாடுகளில் அடங்கும்.