‘கொரோனா ஊரடங்கால் தகவல் தொழில் நுட்பத்திற்கான தேவை அதிகரித்துள்ளது’ - ரஜத் பண்டிட்
புதுமையான சிந்தனைகள் பற்றிய மென்பொருள் டெவலப்பர்களின் கண்ணோட்டத்தை இன்றைய புதிய சூழல் மாற்றியமைத்துள்ளது என்கிறார் கூகுள் கிளவுட் கஸ்டமர் என்ஜினியரிங் துறையின் தலைவர் ரஜத் பண்டிட்.
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால், மக்களின் வாழ்க்கைமுறை, சிந்திக்கும் முறை, வேலை செய்யும் முறை என அனைத்துமே பெருமளவு மாறியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது,” என்கிறார் கூகுள் கிளவுட் கஸ்டமர் என்ஜினியரிங் (தெற்கு) தலைவர் ரஜத் பண்டிட்.
யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான ’டெக்ஸ்பார்க்ஸ் 2021’ மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின்போது இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
’Techsparks 2021’ நிகழ்வு 'அடுத்து என்ன? : எதிர்காலம் குறித்த ஒரு மறுஆய்வு’ என்கிற தலைப்பை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. பெருந்தொற்று சூழலுக்குப் பிறகான நம் வாழ்க்கையைப் புதுமையான தொழில்நுட்பங்கள் எப்படி மாற்றியமைக்கும் என்பது தொடர்பான உரையாடலை ஊக்குவிப்பதற்கான தளத்தை இந்நிகழ்வு அமைத்துக் கொடுத்துள்ளது.
“கோவிட்-19 காரணமாக உலகளவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. இந்தப் புதிய வாழ்க்கைச் சூழல் மிகவும் மாறுபட்டது என்பதை இந்த மாற்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. புதுமையான சிந்தனைகள் பற்றிய மென்பொருள் டெவலப்பர்கள் மற்றும் ஐடி பயிற்சியாளர்களின் கண்ணோட்டத்தை இது மாற்றியுள்ளது,” என்று பண்டிட் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்கள் அலுவலகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் பணிபுரிகின்றனர். இதனால் பாதுகாப்பான, நம்பகமான, விரைவாக அணுகக்கூடிய வணிக அப்ளிகேஷன்களுக்கான தேவை உருவாகியிருக்கிறது. கூகுள் கிளவுட் போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தேவை மிகப்பெரிய வாய்ப்பாகும்.
”எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகப்படியான தேவை எழுந்துள்ளது. அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களும் 24X7 எந்தவித தடங்கலும் இல்லாமல் சேவையளிப்பதை உறுதிசெய்ய எங்கள் ஆதரவைக் கோருகின்றனர்,” என்கிறார்.
அதாவது எங்களது சேவையும் எந்தவித தடங்கலும் இன்றி எங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையவேண்டியுள்ளது, என்று விவரித்தார்.
கூகுள் கிளவுட் டெல்லி என்சிஆர் பகுதியில் இரண்டாவது தகவல் மையத்தைத் திறந்துள்ளது. முதல் மையம் மும்பையில் உள்ளது. இதனால் இந்தியாவில் இரண்டு பகுதிகளில் செயல்படும் ஒரே ஹைப்பர்ஸ்கேலர் என்கிற பெருமையை கூகுள் கிளவுட் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் சேவை தடைபடாமல் இருக்க இந்த இரண்டு பகுதிகளிலும் ஒவ்வொன்றிலும் மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கூகுள் கிளவுட் Compute Engine, App Engine, Google Kubernetes Engine, Cloud Bigtable போன்ற முக்கியச் சேவைகளை வழங்குகிறது.
டெல்லி என்சிஆர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இந்திய யூனிகார்ன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதுதவிர தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், அரசு அமைப்புகள், ஸ்டார்ட் அப்கள் போன்றவை கணிசமான அளவு செயல்பட்டு வருகின்றன என்று பண்டிட் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் தரவு மையங்கள் அமைக்கப்பட்டப் பகுதியுடன் சேர்த்து கூகுள் கிளவுட் நிறுவனத்தின் உலகளாவிய கிளவுட் பகுதிகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, 82 மண்டலங்களும் 146 எட்ஜ் பாயிண்ட்ஸ் உள்ளன. வாடிக்கையாளர்களின் வணிக நோக்கங்கள் முறையாக எட்டப்படுவதற்கு இது உதவுவதாக பண்டிட் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை மற்றும் இதர ஒழுங்குபடுத்தும் துறைகளின் தரவு பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகள் பூர்த்திசெய்யப்பட உதவும் வகையில் டெல்லி என்சிஆர் பகுதியில் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் பண்டிட்.
இந்தியாவில் நிதிச்சேவைகள் வழங்கும் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க செயல்படவேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில கட்டுரையாளர்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா