போலியோ பாதிப்பு, கார் விபத்து - கை, கால்கள் முடங்கியும் மன உறுதி குறையவில்லை - நீச்சல் மூலம் வாழ்க்கையை மாற்றிய கீதா கண்ணன்!
"நான் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நானாகச் செல்லக்கூடிய ஒரே மேற்பரப்பு நீர் மட்டுமே. என் வாழ்நாளில் நான் அனுபவித்திராத சுதந்திர உணர்வை நீச்சல் கொடுத்தது," எனும் பாராலிம்பிக் நீச்சல்வீரங்கனையான கீதா பாேலியோவால் பாதிக்கப்பட்டு தொலைந்த வாழ்க்கையை நீச்சல் மூலம் கண்டறிந்துள்ளார்.
2 வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால் கழுத்துக்கு கீழ் உடலை அசைக்க முடியாத குழந்தையாக வளர்ந்த கீதா கண்ணனுக்கு தண்ணீரை கண்டாலே பயம். ஏன்... ஷவரில் குளிக்கக்கூட அவருக்கு பயம். தண்ணீரில் சிக்கிக் கொள்வோமோ, நுரையீரலில் தண்ணீர் சென்றுவிடும் என்றெல்லாம் கூட பயந்தார். இன்றோ அவருக்கு தண்ணீர் தான் சகலமும். நீர் சிகிச்சை என்ற பெயரில் அவருக்குக் கிடைத்த தண்ணீருடனான நட்பு அவரை நீச்சல் வீராங்கனையாக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 43 வயதான கீதா கண்ணன், பாராலிம்பிக் சாம்பியன். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 40 ஆண்டுகளாக நாற்காலி சக்கரத்தில் முடக்கிய வாழ்க்கையை மாற்றியுள்ளார்.
"நான் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நானாகச் செல்லக்கூடிய ஒரே மேற்பரப்பு நீர் மட்டுமே. என் வாழ்நாளில் நான் அனுபவித்திராத சுதந்திர உணர்வை இந்த நீச்சல் கொடுத்தது. ஃப்ரீஸ்டைல் மற்றும் முன் மற்றும் பின் ஸ்ட்ரோக் நுட்பங்களில் பயிற்சி பெற்றேன். இப்போது, தினமும் 14 மணி நேரங்கள் சுறுசுறுப்பாக வேலை மற்றும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறேன்," என்று கீதா ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
தண்ணீருடனான நட்பு..!
கீதாவிற்கு போலியோ இருப்பது கண்டறியப்பட்ட போது அவருக்கு வயது இரண்டு. கிட்டத்தட்ட அவரது உடலின் எந்த அங்கங்களையும் அவரால் தாமாக அசைத்திட முடியாத நிலையில் இருந்தார். எந்தவொரு வேலை செய்ய வேண்டுமென்றாலும் அவருக்கு மற்றவரின் உதவி தேவை. போலியாவால் அவரது இடது கால் வலது காலைவிட சில மில்லிமீட்டர் நீளம் குறைவாகியது. இதுமட்டுமில்லை ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகெலும்பில் ஒரு அசாதாரண வளைவை ஏற்படுத்தும் நோயாலும் பாதிக்கப்பட்டார்.
கீதாவின் தந்தை ஆர்மியில் பணிப்புரிந்ததால், அவரது குடும்பம் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் வசித்து வந்தது. அவர்கள் செல்லும் இடமெல்லாம், கீதாவின் தாய் அவருக்கு சிகிச்சை அளித்துவந்தார். அதல் பலனாய் உடலின் அனைத்து பாகங்களை அவரால் மெல்ல இயக்க முடிந்தது. கால்களை தவிர... இதனால், சக்கர நாற்காலியில் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு நகர்ந்தது. காலிபர்களின் (செயற்கையாக காலில் பொருத்தப்படும் உலோக ஆதரவு) உதவியுடன் நடக்கத் தொடங்கினார் கீதா.
"பள்ளியில் படிக்கும் போது பிடீ நேரம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். என்னை தவிர... பிடீ நேரம் வந்துவிட்டாலே பயமும் வந்துவிடும். அதனால், எப்பொழுதும் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன். என் முழு ஆற்றலையும் படிப்பிலும், தேர்விலும் செலுத்தி படித்தேன்," என்று பகிர்ந்தார்.
அவருடைய வாழ்வில் வீசிய புயல்கள் நின்றுவிடவில்லை. 2016ம் ஆண்டில், கார் விபத்தில் சிக்கினார். அதில் அவரது இடது தோள்பட்டை ஜவ்வு முழுவதுமாக கிழிந்தது. ஒருவர் கையை துாக்கவும், சுழற்றவும் தோள்பட்டை மூட்டை உறுதிப்படுத்துவதே அந்த தசைகளும், தசை நாண்களும் தான். அதுவே கிழிந்த நிலையில் இடது கை செயல்படுத்த முடியாத நிலைக்கு சென்றது.
இதனால், அவரது வலது கையில் அதிகம் பயன்படுத்தியதில் வலது கையின் எலும்புகள் தேய்மானம் அடைந்தது. 2016 முதல் 2017 வரை ஒரு வருடம் முழுவதும் படுத்த படுக்கையாகவும், தீவிர வலியுடனும் இருந்த அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை.
அந்த சமயத்தில், பெருமூளை வாதம் கொண்ட அவரது நண்பர் சதீஷ் குமார், சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரியும் 39 வயதான வித்யா சாகரிடம் அவரை அறிமுகப்படுத்தினார். அங்கு கீதா, பாரா நீச்சல் வீராங்கனையான மாதவி லதா பிரதிகுடுபுவை சந்தித்தார். அவர் கீதாவை நீர் சிகிச்சையை முயற்சிக்குமாக கூறினார். இம்முயற்சி அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது.
"நீர் பயிற்சியின் மூலம், அதுவரை நான் நிலத்தில் செய்யமுடியாமலிருந்த உடல் அசைவுகளை செய்தேன். 4 வருடங்களாக நான் அனுபவித்த வலி வெறும் 15 நாட்களில் மறையத் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, வாழ்க்கையில் முதல்முறையாக நீச்சல் மூலம் விளையாட்டின் உணர்வை அனுபவித்தேன். குதிப்பது, ஓடுவது, விளையாடுவதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துக்கொண்டே என் குழந்தைப் பருவம் கழிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஏக்கம் தீர்ந்து தண்ணீருடனான எனது பிணைப்பை வலுப்படுத்தியது. நான் இழந்த குழந்தை பருவ தருணங்களை மீண்டும் அனுபவித்தேன்," உணர்ச்சிவசத்துடன் கூறினார் கீதா.
விரைவில், நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நீச்சல் பயிற்சியாளர் டி புருஷோத்தமனை சந்தித்தார். இதற்குமுன்பு நீர் சிகிச்சையின் போது மிதக்கும் முயற்சியில் பல தோல்விகளையும், பயத்தினையும் எதிர்கொண்ட நிலையில், பயிற்சியாளர் ஃப்ரீஸ்டைல் நீச்சலைத் தொடங்க பரிந்துரைத்தார். இரண்டு மாதங்களில் 25 மீட்டரைக் கடந்தேன், என்றார்.
"விளையாட்டு சுதந்திரத்தை மட்டும் அளிப்பதில்லை...!"
சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் அவர் நீச்சல் அடிப்பதையும் அவரது முன்னேற்றத்தையும் பார்த்த, மற்ற நீச்சல் வீரர்கள் போட்டித்தன்மையுடன் நீந்தும்படி வற்புறுத்தினார்கள்.
இன்று, கீதா ஒவ்வொரு போட்டிக்கான பயிற்சியின் போது ஒரு நாளைக்கு 100 மீட்டர் நீந்துகிறார். காலை 6.30 மணிக்கு தொடங்கும் கீதாவின் நாள், வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கான கணக்கு ஆசிரியராக தொடங்குகிறது. மதியம் 12.30 மணி வரை கற்பித்தல் பணியை நிறைவு செய்த பின், மதியஉணவைத் தயாரித்து சாப்பிட்டுவிட்டு மதியம் 2.30 மணியிலிருந்து அவருடைய கற்றல் காலம் தொடங்குகிறது. மாலை வரை நீச்சல் பயிற்சி செய்து விட்டு இரவு 9.30 மணியளவில், அவர் வீட்டிற்குத் திரும்பி, இரவு உணவை முடித்துவிட்டு, மீண்டும் வேலையை தொடங்குகிறார்.
இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான கீதா, தென்சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து பெரியமேடு வரை தினமும் 34 கிலோமீட்டர் பயணம் செய்கிறார். ஏனெனில், அங்குள்ள நீச்சல் குளத்தில் சக்கர நாற்காலி செல்வதற்கு ஏதுவான சறுக்கும் பாதையும், நாற்காலி லிப்ட் வசதியும் உள்ளது. தண்ணீருக்குள் செல்லவும், வெளியே வரவும் நாற்காலி லிப்ட் உதவுகிறது. பல பாரா நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் ஆர்வலர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.
"பல இளம் உடல் ஊனமுற்றவர்களிடம் விளையாட்டில் குறிப்பாக நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவிற்கான திறமை இருக்கிறது. என்னை என் கணவர் காரில் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்கிறார். ஆனால், பலரிடம் கார் வசதி இருப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலையில், பயணம் அவர்களது எனர்ஜியை உறிஞ்சிவிடும், சோர்வை அளிக்கும், போக்குவரத்து செலவினங்கள் அதிகமாகும்.
வழக்கமான நீச்சல் குளங்கள் ஊனமுற்றவர்களுக்கு உகந்ததாக இல்லை. இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், நகரத்தைச் சுற்றியுள்ள பல விளையாட்டு மற்றும் நீச்சல் கிளப்கள், விளையாட்டு எங்களுக்கு சுதந்திரம் அளிப்பது மட்டுமின்றி, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான திறவுகோல் என்பதை புரிந்து மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார் கீதா.
வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சவால்கள் இருப்பதினால் தோல்வியடைவதாக மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒவ்வொருவரும் கீதாவின் கதையை உந்துதலாக எடுத்துக்கொள்ளவேண்டும். இத்தனை கடினங்களிலும் ஜொலிக்கும் கீதா பலரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேமில்லை.
தமிழில்: ஜெயஸ்ரீ
'இழந்தது காலை மட்டுமே, நம்பிக்கையை அல்ல' - கனவுகளை அடைய ‘கறிதோசை’ கடை நடத்தும் வீணா!