ஜூன் 8 முதல் வழிபாட்டு தளங்கள் திறப்பு: மத்திய அரசு நெறிமுறைகள் என்ன?
வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகம் ஒன்றுகூட வாய்ப்பிருப்பதால் மத்திய அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
இந்தியாவில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கோவிட்-19 அதிகம் பரவ வாய்ப்புள்ள பொது இடங்களில் செயல்படுவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கும் அதேநேரம் இந்த நோய்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதே இந்த புதிய வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகம் ஒன்றுகூட வாய்ப்பிருப்பதால் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது. 65 வயதிற்கு மேற்பட்டோர், நோய் வாய்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
அனைவரும் பின்பற்றவேண்டிய பொதுவான தடுப்பு நடவடிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- பொது இடங்களில் தனிநபர்களுக்கு இடையே குறைந்தபட்சமாக 6 அடி இடைவெளி இருக்கவேண்டும்
- கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்
- கைகளைஅடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவவேண்டும் (குறைந்தபட்சம் 40-60 விநாடிகள்). ஆல்கஹால் சார்ந்த சானிடைசரைப் பயன்படுத்தலாம்.
- இருமல் அல்லது தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை டிஷ்யூ அல்லது கைக்குட்டை கொண்டு மூடவேண்டும். அல்லது முழங்கையை மடக்கி இருமவேண்டும். பயன்படுத்திய டிஷ்யூக்களை முறையாக அப்புறப்படுத்தவேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தை சுயமாகக் கவனித்து உடல்நலக் குறைபாடுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மாநில மற்றும் மாவட்ட உதவிஎண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும்.
- எச்சில் துப்புவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
- அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை நிறுவ அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் கீழ்கண்ட நடவடிக்கைகள் உறுதி செய்யப்படவேண்டியது அவசியம்.
- வழிபாட்டுத் தலங்களின் நுழைவாயிலில் சானிடைசர் வைக்கப்படவேண்டும். தெர்மல் ஸ்கிரீனிங் வசதி கட்டாயம் இருக்கவேண்டும்.
- கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
- முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவேண்டும்.
- கோவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள் அல்லது சுவரொட்டிகள் வைக்கப்படவேண்டும். கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஒலிபெருக்கி அல்லது வீடியோ மூலம் ஏற்படுத்தவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் செருப்பு அல்லது ஷூக்களை தங்களது வாகனங்களிலேயே விட்டுவிடலாம். அல்லது தனியான இடத்தில் குடும்பத்தினர் அனைவரின் செருப்புகளையும் வைக்கவேண்டும்.
- வாகனங்களை நிறுத்துமிடங்களிலும் வழிபாட்டுத் தலங்களின் வெளிப்புறங்களிலும் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் வெளிப்புறத்திலும் அமைந்துள்ள கடைகள், தேநீர் கடைகள் போன்ற இடங்களில் சமூக விலகல் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வரிசையில் செல்லும்போது போதுமான இடைவெளி இருக்கும் விதத்தில் அடையாளப்படுத்தவேண்டும்.
- நுழைவாயில், வெளியேறும் இடம் ஆகியவை தனித்தனியாக அமைப்பது சிறந்தது.
- நுழைவாயிலில் வரிசையில் செல்லும்போது 6 அடி இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும்முன்பு கைகளையும் கால்களையும் நன்று கழுவவேண்டும்.
- சமூக இடைவெளி பின்ப்பற்றப்படும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் குளிர்சாதன வசதி இருக்கும்பட்சத்தில் 24 முதல் 30 டிகிரி வரை இருக்குமாறும் ஈரப்பதம் 40 முதல் 70% இருக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள் அல்லது புனித நூல்களை தொட அனுமதிக்கக்கூடாது.
- கூட்டம் கூடுதல் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.
- பதிவு செய்யப்பட்ட பக்திப் பாடல்களை ஒலிபரப்பலாம். வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பலர் ஒன்றுகூடி குழுவாகப் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளவேண்டும்.
- பொதுவான தரைவிரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து பக்தர்கள் தங்களுக்கென தனித்தனியாக தரைவிரிப்புகளைக் கொண்டு வந்து பயன்படுத்தி திருப்பி எடுத்துச்செல்லவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம் வழங்கப்படுவதையும் புனித நீர் தெளிப்பதையும் அனுமதிக்கக்கூடாது.
- அன்னதானம் வழங்கப்படும் தலங்களில் சமுதாய உணவுக்கூடம், லாங்கர் போன்ற இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களை முறையாக சுத்தப்படுத்தவேண்டும்.
- கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுவதை வழிபாட்டுத் தலங்களில் நிர்வாகம் உறுதிசெய்யவேண்டும்.
- குறிப்பாக தரைப்பகுதி அடிக்கடி சுத்தம் செய்யப்படவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்குள் நோய் தொற்று பாதிக்கப்பட்டவரோ அல்லது அதற்கான அறிகுறிகள் இருப்பவரோ வர நேர்ந்தால்,
- அவர் தனி அறையில் தனிமைப்படுத்தப்படவேண்டும்.
- மருத்துவர் பரிசோதனை மேற்கொள்ளும்வரை அணிந்துகொள்ள முகக்கவசம் வழங்கவேண்டும்.
- அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது மாநில/மாவட்ட உதவிஎண்களைத் தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கவேண்டும்.
- அந்த நபருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால் உடனடியாக அந்த இடத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.