‘தகுதி, திறமை இருந்தால் வாரிசுகள் நிறுவன தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை’ - இன்போசிஸ் நாராயணமூர்த்தி!
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில், நிறுவனத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைக்கும் கொள்கை முடிவு தவறானது என நிறுவனர் நாராயணமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனர் நிர்வாகம் தொடர்பாக தான் எடுத்த ஒரு கொள்கை முடிவு தவறானதாக அமைந்துவிட்டது என அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில், நிறுவனத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைக்கும் கொள்கை முடிவு தவறானது என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னோடி மற்றும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது நாராயணமூர்த்தி இவ்வாறு கூறினார்.
இன்போசிஸ் நிறுவன தலைமை பதவி தொடர்பான பிரச்சனைகள், நிறுவனர்கள் வாரிசுகள் பதவிக்கு வரும் நிலை இருந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்குமா? என கேட்கப்பட்ட போது, நாராயணமூர்த்தி அதற்கு பதில் அளித்தார். இது தொடர்பான தனது முந்தைய கொள்கை முடிவு தவறானது என கருதுவதாக கூறினார்.
”நிறுவனத்திற்கு தகுதி வாய்ந்த திறமையை மறுத்ததாக நினைக்கிறேன். இது தொடர்பாக நான் முன்பு கூறியதை எல்லாம் திரும்ப பெறுகிறேன். ஒரு பொறுப்பிற்கு தகுதி வாய்ந்தவர் பரிசீலிக்கப்படும் போது, மற்ற எல்லோரையும் போலவே, எல்லா நபர்களுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.
குடும்ப உறுப்பிர்களை நிர்வாக தலைமைப் பொறுப்பில் கொண்டுவரும்போது, ஒரு சிலர் தகுதி இல்லாத நபர்களை கொண்டுவந்துவிட்டோம் என்று நினைப்பார்கள் எனும் அச்சத்தில், நிறுவன பொறுப்புகளில் குடும்ப உறுப்பினர்களை தவிர்க்க முன்பு முடிவு எடுத்திருந்தேன், என அவர் விளக்கம் அளித்தார். நிறுவனம் வலுவாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார்.
”நான் செய்தது தவறு. இந்த கருத்தை இப்போது திரும்ப பெறுகிறேன். எனது தவறை ஒப்புக்கொள்கிறேன். பொறுப்பிற்கு தகுதி வாய்ந்தவர் என்றால், ஒருவர் எந்த நாட்டை, எந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர், யாருடைய மகன்/ மகள் என்பது ஒரு பொருட்டல்ல என்பதே என் இன்றைய நிலைப்பாடு. ஆனால் அந்த பொறுப்பை அளிக்கும் முன் முறையான முதிர்வு செயல்முறை பின்பற்றப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தில், குடும்ப உறுப்பினர் கொள்கைக்கு விதிவிலக்காக, நாராயணமூர்த்தியின் மகன் ரோகன், 2013ல் அவருக்கு செயல் உதவியாளராக பணியாற்றினார். ஆனால், 2014ல் அவர் நிறுவனத்தில் இருந்து விலகினர்.
தொகுப்பு: சைபர் சிம்மன்
ஐ.டி துறையில் பெண்கள் நிலைத்து இருக்க ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி குறிப்பிட்ட அந்த 3 தரப்புகள்!
Edited by Induja Raghunathan