இரு கால்கள், ஒரு கையை இழந்தும் நம்பிக்கை இழக்காத 'கார்கில்' நாயகன் தீப்சந்த்!
‘சதைவ சைனிக்க புதேச்ஜாயச்சே, நா மகுட்டி துவ கதி ஃப்ரேச்சே, தஹா திஷதுன் தூஃபான் வஹாச்சே, சதைவ சைனிக்க புதேச் ஜாயச்சே...’
(வீரர்கள், திரும்பிப் பார்க்காமல் அல்லது தங்கள் பாதையில் இருந்து விலகிச் செல்லாமல். எப்போதும் முன்னோக்கி நடை போட வேண்டும். எல்லா திசைகளிலும் இருந்து சூறைக்காற்றோ அல்லது புயலோ வந்தாலும், ஒரு வீரர் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.)
மகாராஷ்டிரா மண்ணில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள், மராத்திய வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்தப் பாடலை பாடுவதுண்டு. ஆனால் தீப்சந்த் இந்த பாடலின் வரிகளின்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நாட்டுக்காக போராடி உயிர் தியாகம் செய்த பலர் தியாகிகளாகி உள்ளனர். பலர் நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எனினும், ஜவான்களை பொருத்தவரை நாட்டுக்காக இத்தகைய தியாகங்களை செய்வது பெருமைக்குரியது.
இருப்பினும், 30 ஆண்டுகளுக்கு மேல் நாட்டைக் காக்கும் பணியில் தீரமுடன் செயல்பட்டு, பின்னர் விபத்து ஒன்றில் உடல் உறுப்புகளை இழப்பது என்பது எந்த வீரருக்கும் சோகமானது. இந்த வலியை மிகுந்த தீரத்துடன் எதிர்கொண்டு, வாழ்க்கையிலும் போர் குணத்தை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார் தீப்சந்த் பிரகாயத்.
வேர்கள்
ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த தீப்சந்த் பிரகாயத், தனது ராணுவ பயிற்சிக்காக மகாராஷ்டிரா வந்தார். 1989 லைட் ரெஜிமண்ட் பிரிவில் அவர் துணிச்சலான துப்பாக்கி வீரராக துவங்கினார். ராணுவ பதக்கம் வென்ற நிலையில், அவர் காஷ்மீரில் பணிக்கு அனுப்பட்டார். அங்கு தளபதி ஜி.கே.மகேந்திரட்டா கீழ் பணியாற்றினார்.
பணியில் இருந்த காலத்தில் கார்கில் போரில் பங்கேற்றதோடு, காஷ்மீரின் லடாக்கில் பல துணிச்சல் மிகு செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது கூட அவரது பேச்சில், நாட்டுப்பற்றும் ராணுவம் மீதான பற்றும் வெளிப்படுகிறது. நேர்காணலின் போது அவர் தனது சாகசங்கள் பற்றி பேசத்தயங்கினார். எனவே, கர்னல் கே.மகேந்திரட்டாபை தொடர்பு கொண்டோம்.
போர்க்களத்தில்...
1998ல் காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த போது, தீப்சந்த் பிரிவு குல்மார்கில் பணியில் ஈடுபட்டிருந்தது. தீப்சந்த் போன்ற ஒரு வீரரை காண்பது அரிது என்கிறார் கர்னல் மகேந்திரட்டா. அவருடன் பணியாற்றிய வீரர்களும் இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.
அப்போது, தீப்சந்த் பயங்கரவாதிகள் மறைவிடம் பற்றிய தகவல் திரட்டுவதற்காக உள்ளூர் மக்கள் மத்தியில் உளவாளியாக செயல்பட்டார். இந்த காலத்தில் அவர் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் மொழியை கற்றுக்கொண்டார். தீவிரமான செயல்பாட்டிற்கு பிறகு அவரது குழு, தர்கம் எனும் கிராமத்தில் தீவிரவாதிகள் செயல்பாடு தொடர்பான அறிக்கையை அளித்தார்.
அவர் கொடுத்த தகவல் சரியாக இருந்தது. பகலில் ராணுவ செயல்பாடு தீவிரமாக இருப்பதை உணர்ந்து பயங்கரவாதிகள் இரவில் செயல்பட்டனர். தீப்சந்த் அளித்த தகவலின் அடிப்படையில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின் படி, தீப்சந்த் உள்ளிட்ட வீரர்கள் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். ஆனால், அந்த வீட்டின் கீழ் தளத்தின் வசித்த பெண்ணால் ராணுவம் பற்றி எச்சரிக்கப்பட்டது. இதனால் துப்பாக்கி மோதல் உண்டானது.
அந்த வீட்டில் இருந்து யாரையும் வெளியேற அல்லது உள்ளேச் செல்ல அனுமதிக்காமல், இரவு வரை மோதல் நீடித்தது. அடுத்த நாள் காலை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டமர். நம் தரப்பிலும் வீரர் ஒருவர் பலியானார். இந்த நடவடிக்கையை பத்திரிக்கைகள் பாராட்டின.
“அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில், அந்தப் பகுதியை பயங்கரவாத அச்சம் இல்லாத பகுதியாக மாற்றினோம். தீப்சந்த் போன்ற தீரமிகு வீரர்களே இதற்கு காரணம் என்கிறார் கர்னல்.
சூறாவளி நடுவே
கார்கில் போரிலும், தீப்சந்த் பிரிவு முக்கியப் பங்காற்றி இருக்கிறது. 1999 மே மாதம் எல்லை அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் எதிரி நிலைகளில் 8 கிமீ தொலைவில் சுடக்கூடிய திறன் படைத்த 120 மிமீ மோட்டார்கள் கொடுக்கப் பட்டிருந்தன.
எதிரிகளிடமும் இதே போன்ற ஆயுதங்கள் இருந்தன. இந்த நடவடிக்கைக்கு தலைமையேற்ற தீப்சந்த், 14,000 தோட்டாக்களை பிரயோகித்தார். எதிரிகளின் ஆயுதங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர் செயல்பட்டார்.
அதன் பிறகு, நாடாளுமன்ற கட்டிடம் மீது தாக்குதல் நடைபெற்று போர் போன்ற சூழல் உண்டானது. அப்போது தீப்சந்த் ராஜஸ்தானின் பணியாற்றிக்கொண்டிருந்தார். பல நாட்கள் இரவு பகல் தூக்கம் இல்லாமல், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்த பிரிவு தயார் நிலையில் இருந்தது. அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.
பதற்றம் தணிந்த பிறகு, பார்மரில் இருந்து அவர்கள் தங்கள் உடமைகளை பேக் செய்து கொண்டிருந்தனர். திடிரென வெடிகுண்டு ஒன்று வெடித்து, தீப்சந்த் உள்ளிட்ட மூவரை காயப்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி வேதனையோடு கர்னல் நினைவு கூர்கிறார்.
“கார்கில் மற்றும் காஷ்மீரில் தீரத்துடன் போரிட்டு மரணத்தில் இருந்து தப்பிப் பிழைத்த ராணுவ வீரர்கள் இது போன்ற வெடி விபத்தில் காயமடைவது சோகமானது. அவர் பிழைக்க வாய்ப்பில்லாத அளவுக்கு காயம் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவரை எப்படியாவது காப்பாற்றுமாறு டாக்டர்களிடன் வேண்டினேன். தீப்சந்த் நிறைய இரத்தம் இழந்துவிட்டதால், அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அப்போதும் கூட அவர் பிழைக்க உத்திரவாதம் இல்லை என்றனர்.”
மன உறுதி
காலை 4 மணிக்கு ஆப்பரேஷன் துவங்கியது. மறுநாள் தான் தீப்சந்த் சுயநினைவு பெற்றார். 17 பாட்டிகள் இரத்தம் மற்றும் சக வீரர்களின் பிராத்தனை அவரை காப்பாற்றியது.
“இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த நிலையிலும் தீப்சந்த் கலங்கிவில்லை,” என்கிறார் கர்னல்.
“உண்மையில் அவர் சுயநினைவு பெற்ற பிறகு நான் அவருக்கு ஆறுதல் சொல்வதற்கு பதில், எல்லாம் சரியாகிவிடும் என அவர் என்னிடம் கூறினார். அவரைபோல உறுதி படைத்தவர்கள் வெகுசிலரே,” என்கிறார் கர்னல்.
“கால்களை மற்றும் கையை இழந்தவுடன் நான் என்னைப்பற்றி நினைக்கவில்லை. என் மனைவி மற்றும் ஒரு வயது மகனை நினைத்தேன். என் மனைவி பார்க்க வந்த போது தலையணையால் மறைத்துக்கொண்டேன்,” என இந்த அனுபவத்தை நினைவு கூர்கிறார் தீப்சந்த். இந்த விபத்திற்குப் பிறகு அரசு உதவி கிடைத்ததா எனும் கேள்விக்கு இது போரின் போது நிகழவில்லையே என அவர் பதில் அளிக்கிறார்.
பிராத்தனையின் பலன்
சோதனையான நிலையிலும் அவர் பரிதாபம் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கவில்லை. தனது நிலையை ஏற்றுக்கொள்வதன் மூலமே இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் என நம்பினார். அதற்கேற்ப இன்று அவர் யாரையும் சாராமல் சுயமாக வாழந்து வருகிறார்.
“மருத்துவமனையில் என்னைப்போல நூற்றுக்கணக்கான காயமடைந்த வீரர்கள் இருந்தனர். அவர்களில் பலர் உயிருடன் இருந்தாலும், மற்றவர்கள் உதவியுடன் எழுந்து கொள்ள கூட முடியாத நிலையில் இருந்தனர். என் சகா ஒருவர் இரு கண்களையும் இழந்து விட்டார். அவர்களில் அதிர்ஷ்டசாலியாகிய நான், இரண்டு கால்களும் இல்லாமல் நடக்க கற்றுக்கொண்டேன்.
“உங்களுக்கான ஆசிகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களை விட கீழ் நிலையில் இருப்பவர்களை பாருங்கள். இது போன்ற வாழ்க்கை தத்துவங்களை குருவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியாது. வாழ்ந்து அனுபவம் பெற்ற உண்மையான மனிதர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்,” என்கிறார் தீப்சந்த்.
இப்போது அவரது பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கின்றன. அவரது மனைவி மிகவும் கடின முயற்சிக்கு பின் அரசு வேலை பெற்றிருக்கிறார். தீப்சந்த் சக்கர நாற்காலி இல்லாமல் இயங்க கற்றுக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரில் வசிக்கிறார்.
இரண்டாவது மகன் பிறந்த நிலையில் அவரது மகிழ்ச்சி அதிகமானது. அவர் எப்போதும் வாழ்க்கையின் ஆசிகளையே பார்க்கிறார். தன் மகன்களை மருத்துவம் பயில வைக்கும் கனவுடன் அவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
“நான் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி வந்திருக்கிறேன். இதற்கு மருத்துவர்களே காரணம். எனவே என மகனும் மருத்தவரானால் மகிழ்வேன்...” என்கிறார் அவர் உற்சாகமாக.
ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சால் ஷா | தமிழில் : சைபர்சிம்மன்