'திருமதி இலங்கை பட்டம்' சர்ச்சை - கைதான முன்னாள் உலக அழகி மகுடத்தை திருப்பிக் கொடுத்து உருக்கம்!
பட்டத்தை விட்டுத்தர தயார் என அறிவிப்பு!
2021ம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் முதல் இடம் பிடித்தார் என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மிகவும் சந்தோசத்துடன் அழகிக்கான கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் ஒருசில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
அழகிப் போட்டி நடந்த தளத்திலேயே அவர் குறித்து சில விவரங்கள் வெளிவந்தது. அதாவது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் போட்டியின் விதிப்படி, அவர் அழகி பட்டம் பெறத் தகுதியில்லை என அறிவிக்கப்பட்டது.
உடனே, கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி, அங்கிருந்த புஷ்பிகாவிடம் இருந்து கிரீடத்தை வேகமாக எடுக்க, இதில் புஷ்பிகாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன்பின், புஷ்பிகா கிரீடம் வாங்குவதற்கான போராட்டத்தில் இறங்கினார். காரணம், புஷ்பிகா கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றாலும் இன்னும் அவர்களுக்குள் விவாகரத்து ஆகவில்லை. இதை உறுதியப்படுத்திய பின் மீண்டும் அழகிப் பட்டம் புஷ்பிகாவுக்கே திரும்ப வழங்கப்பட்டது.
அதேநேரம் புஷ்பிகா மீது வீண் பழி சுமத்தினார் என்று கரோலின் மீது புகார் அளிக்கப்பட, தாக்குதல் மற்றும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கொழும்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கரோலின், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவ கரோலின் மீது வசைபாடுகள் அதிகம் விழுந்தது. இதையடுத்து, தற்போது தன்னிலை விளக்கம் ஒன்றை கரோலின் அளித்துள்ளார். அதில்,
“நான் எப்போதும் சரியானது என்று நம்புவததை மட்டுமே செய்வேன். ஒவ்வொரு அழகுப் போட்டிகளிலும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே நான் முன்வைத்திருப்பது ஒரு நியாயமான கூற்றாகும். விதிகளும் விதிமுறைகளும் அனைவருக்கும் சமம். எந்தவொரு நிலையிலும் நாம் வெல்லக்கூடிய வகையில் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு இல்லை. ஒரு காரணத்திற்காக விதிகளும் விதிமுறைகளும் உள்ளன என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
திருமதி உலகப் போட்டி விவாகரத்து செய்யப்பட்ட அல்லது பிரிந்த பெண்களிடையே பாகுபாடு காட்டுவதற்காக உருவாக்கப்படவில்லை. ஆனால் திருமணமான பெண்களின் கனவுகளை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டது.
ஒரு திருமணமான பெண் நிறைவேற்ற முற்படும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புகள் இருந்தபோதிலும், திருமணமான மற்றும் இன்னும் தங்கள் கனவுகளை வெல்ல முயற்சிக்கும் அனைத்து பெண்களையும் கொண்டாடுவதே திருமதி உலக போட்டியின் நோக்கம். ஆனால் அங்கு நான் கண்ட அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது ஒரே நோக்கம், கடுமையான அரசியல்மயமாக்கலால் களங்கப்படுத்தப்பட்ட இந்த போட்டி முழுவதும் போட்டியாளர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு துணை நிற்பதுதான், என்று தெரிவித்துள்ளார்.
கொடுமைகளை எதிர்கொண்டு தனியாக நிற்பது என்று அர்த்தம் இருந்தாலும் நான் மதிப்புகளுக்காக நிற்கிறேன். நாங்கள் கடினமாக உழைத்ததை இழக்க நேரிடும் என்பதால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று நாங்கள் அடிக்கடி முடிவு செய்கிறோம். இருப்பினும், இன்னொரு தகுதியானவருக்கு வாய்ப்பை வழங்க கிடைத்ததை இழப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். இந்த மகுடம் அதற்கான அங்கீகாரமாகவும், நியாயமான, சம வாய்ப்பை வழங்குவதாகவும் இருக்கவேண்டும் என நம்புகிறேன்.
”அதனால் என்னுடைய இந்த கிரீடத்தை நான் திரும்பக் கொடுக்கத் தயாராகிவிட்டேன். ஒரு நியாயமான வாய்ப்பு எல்லா பெண்களுக்கும் தேவை,” என்று உருக்கத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார் கரோலினா ஜூரி.
தொகுப்பு: மலையரசு