பத்மஸ்ரீ விருது வென்ற ஒடிசாவைச் சேர்ந்த டீக்கடைக்காரர்!
குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பங்களித்தமைக்காக நான்காம் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வென்றுள்ளார் டீ விற்பனையாளரான 59 வயது தேவரபள்ளி பிரகாஷ் ராவ்.
59 வயதான தேவரபள்ளி பிரகாஷ் ராவ் ஒடிசாவின் கட்டாக் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். 2018-ம் ஆண்டு முதல் இவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். பிரதமர் கட்டாக் பகுதிக்குச் சென்றபோது இவரை சந்தித்துள்ளார். அதன் பிறகு மன் கீ பாத் வானொலி உரையில் இவரது பணி குறித்து பிரதமர் பாராட்டியதை அடுத்து இவரைப் பற்றிய செய்திகள் வெளிவரத் துவங்கின. இவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தேவரபள்ளி பிரகாஷ் ராவ் கடந்த இருபதாண்டுகளாக டீ விற்பனை மூலம் ஈட்டும் வருவாயில் பாதித்தொகையை 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பிற்காக ஒதுக்கி வருகிறார். குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த இந்தக் குழந்தைகள் நான்கு முதல் ஒன்பது வயதுடையவர்கள்.
இவர்கள் ரிக்ஷா ஓட்டுபவர்கள், தினக்கூலிகள், நகராட்சி பாதாள சாக்கடைத் தொழிலாளர்கள் போன்றோரின் குழந்தைகளாகும். தரமான கல்வியை அணுகமுடியாத நிலையில் இருக்கும் இந்தக் குழந்தைகளுக்கே இவர் உதவி வருகிறார்.
இந்தக் குழந்தைகள் மதுப் பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு கல்வியில் கவனம் செலுத்துவதற்காக 2000-ம் ஆண்டு Asha O Ashwasana என்கிற பள்ளியைத் துவங்கினார் தேவரபள்ளி பிரகாஷ் ராவ். இவரது சிறு வயதில் முறையான படிப்பு மேற்கொள்ள இவரது அப்பாவால் ஊக்குவிக்கப்படாத நிலையில் இவரைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உதவுகிறார் என ’ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
இண்டியா டுடே உடனான நேர்காணலில் தேவரபள்ளி பிரகாஷ் ராவ் குறிப்பிடுகையில்,
“எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அரசாங்கத்தால் வழங்கப்படும் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். அத்தகைய உயரிய விருது பெற நான் தகுதியானவன் இல்லை. ஆனால் இந்த விருதினை எனக்கு வழங்க மக்கள் விரும்பினால், அது மற்றவர்களுக்கு உந்துதலாக அமையும்,” என்றார்.
பிரகாஷ் ராவ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடரமுடியாத சூழலில் இன்று பலருக்கு உந்துதலளிக்கிறார். இவர் எட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
குழந்தைகளின் படிப்பிற்கு ஆதரவளிப்பதுடன் 1976-ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வருகிறார். தனது வருமானத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் போன்றவற்றை மதிய உணவாக வழங்குவதுடன் பள்ளிச் சீருடை, காலணி போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.
கட்டுரை : THINK CHANGE INDIA