தனி ஒருவர் பெயரில் 10 சிம்கார்டுகளை வைத்திருந்தால் அபராதம், சிறை - புதிய சட்டம் அமல்!
தனிநபர் ஒருவரது பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் அபராதம் முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வரை அளிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் பலவற்றுக்கு தொலைபேசி சாதனமே காரணமாக இருக்கிறது என்பதால் சிம் கார்டுகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. தனிநபர் ஒருவரது பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் அபராதம் முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வரை அளிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தப் புதியச் சட்டத்தின்படி, ஒருவர் தன் பெயரில் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம். இதனை மீறி ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தனி நபர் ஒருவர் பெயரில் 6 சிம்கார்டுகளே வைத்திருக்க முடியும். வரையறைக்கும் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரமும், அதன்பிறகும் அந்த குற்றம் தொடருமானால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையில் அபராதம் உண்டு.
மேலும், பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதனால் மேலும் சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக வயர்லஸ் கருவி வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம், தொலைதொடர்பு சேவைகளை தடுக்கக்கூடிய அங்கீகரிக்கப்படாத சாதனங்களை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் உண்டு.
ஆகவே, அவ்வப்போது தங்கள் பெயரில் சிம்கார்டுகள் சட்ட விரோதமாக நமக்குத் தெரியாமலே பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய சஞ்ச்சார் சதி போர்ட்டலுக்குச் சென்று அதாவது sancharsathi.gov.in என்ற இணையத்திற்குச் சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள ’செக் யுவர் மொபைல் கனெக்ஷன்ஸ்’ என்ற இணைப்பைச் சொடுக்கவும். அதில் உங்களது 10 இலக்க மோபைல் எண்ணைப் பதியவும். கேப்ச்சா கோட் உங்கள் திரையில் தெரியும். உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபியை உள்ளிட்டு செக் செய்தால் உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டுகள் விவரம் கிடைக்கும்.