Sovereign Gold Bond Scheme’24 தொடக்கம் - விலை, தள்ளுபடி மற்றும் சந்தாவுக்கான கடைசி தேதியை தெரிந்து கொள்ளுங்கள்!
தங்கத்தை உலோகமாக இல்லாமல் ஆவண வடிவில் வாங்கும் சவரின் கோல்டு பாண்ட் முதலீட்டு வாய்ப்பை மத்திய அரசு இன்று தொடங்கியுள்ளது.
தங்கத்தை உலோகமாக இல்லாமல் ஆவண வடிவில் வாங்கும் ’சாவரின் கோல்டு பாண்ட்’ (Sovereign Gold Bonds) முதலீட்டு வாய்ப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்திற்கு தனி மரியாதை உண்டு. குறிப்பாக பெண்கள் தங்கத்தை மிகவும் விரும்புகிறார்கள். அதிலும் தங்க ஆபரணங்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதுவே தங்கத்தின் விலை விண்ணைத்தொட சில சமயங்களில் காரணமாக அமைகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கம் வெறும் அணிகலனாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தில் முதலீடு செய்வோர் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் உள்ளனர்.
ஆனால், நீங்கள் என்னதான் பார்த்து, பார்த்து புதுப்புது டிசைன்களில் நகைகளை வாங்கினாலும், அதனை விற்கும் போது லாபம் வந்தாலும் சேதாரம் மற்றும் தள்ளுபடிகள் போக நஷ்டமே அதிகம். அதுவும் கல் வைத்த நகைகளுக்கு ரீசேல் மதிப்போ அவ்வப்போது குறைந்துவிடும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் ஆபரணத் தங்கமாக வாங்குவதை விட, மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் தங்க பத்திரங்களை வாங்குவது லாபகரமானது மற்றும் பாதுகாப்பானது.
இன்று முதல் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 2024ம் ஆண்டிற்கான “இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம்” தொடங்கியுள்ளது.
இறையாண்மை தங்கப் பத்திர திட்டம் சந்தா தேதிகள்:
2024 ஆம் ஆண்டின் முதல் தங்கப் பத்திரத் திட்டம் பிப்ரவரி 12, 2024 அன்று தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இந்த சந்தா விண்டோ பிப்ரவரி 12 முதல் 16 வரை கிடைக்கும்.
முதலீடு செய்தவர்களுக்கு பத்திரங்கள் பிப்ரவரி 21, 2024 அன்று வழங்கப்படும்.
எங்கு வாங்கலாம்?
ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அங்கீகரிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளில் இருந்து இறையாண்மை தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
தள்ளுபடி, விலை எவ்வளவு?
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்கள் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் வெளியீட்டு விலை 6,199 ரூபாயாக குறைகிறது.
திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுடைய தங்கப் பத்திரங்களை விற்கலாம்.
முதிர்வு காலம்:
இறையாண்மை தங்கப் பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். முதலீட்டாளர்கள் விரும்பினால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூட பத்திரங்களை விற்பனை செய்யலாம். ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை வாங்கலாம். அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 20 கிலோ வரை காகித தங்கம் வாங்க வாய்ப்பு உள்ளது.
மேலும், தங்கப் பத்திரங்களின் விலை, சந்தாவுக்கு மூன்று வேலை நாட்களுக்கு முன், இந்திய பொன் மற்றும் ஜூவல்லரி சங்கம் அறிவித்த விலைகளின் சராசரியின்படி நிர்ணயிக்கப்படும்.
ஆண்டுக்கு 2.50 சதவீதம் என்ற நிலையான விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
YS தமிழ் Explainer - 'டிஜிட்டல் கோல்ட்' என்றால் என்ன? சாதக-பாதகங்கள் இதோ!