விடாமுயற்சியுடன் வெற்றியை வசப்படுத்திய பெண் தொழில்முனைவர்!
அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, அவரது கனவுகளை நனவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் 5.5 % அதிகரிக்கச் செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த புஷ்பா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெப்பப் பரிமாற்ற உபகரணங்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஷீத்தல் தலாதி தனது அப்பா இறந்த பிறகு வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
”நான் வணிகப் பொறுப்புகளை ஏற்று பத்தாண்டுகள் முடிந்துள்ளது. சிறப்பாக செயல்படுவதற்காக எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளோம். வணிகம் சிறப்பாக உள்ளது. என் அப்பாவை இழந்து வாடுகிறோம். ஒவ்வொரு முறை பணியில் வெற்றியடையும்போதும் என் அப்பாவை நெருங்கும் உணர்வு ஏற்படுகிறது. இது அவரது கனவு மட்டுமல்ல. எங்கள் கனவு," என்றார்.
ஷீத்தல் தனது அப்பாவை அடுத்து வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது, சுயமாக கற்கும் தொழில்முனைவராக உருவானது, வளர்ச்சித் திட்டங்கள் வகுத்தது என பல்வேறு விஷயங்களை ஹெர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.
இழப்பு கடினமே!
ஷீத்தலும் அவரது இரண்டு சகோதரிகளும் சிறு வயது முதலே எவ்வாறு வலுவானவர்களாகவும், தற்சார்புடனும் புத்திசாலிகளாகவும் தங்களது அப்பாவால் வளர்க்கப்பட்டனர் என நினைவுகூர்ந்தார்.
”எங்களது திருமணம் குறித்து அவர் கவலைப்படவில்லை. நாங்கள் சுயமாக ஏதேனும் உருவாக்குதில் கவனம் செலுத்தவேண்டும் என எப்போதும் அறிவுறுத்துவார்,” என்றார்.
இதே உந்துதலுடன் ஷீத்தல் படிப்பில் சிறந்து விளங்கினார். ஓவியம் வரைவதில் விருப்பம் இருந்ததால் அதில் ஈடுபட்டார். அவரது அப்பா தனது வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கில் கவனம் செலுத்தினார். ஆனால் வாழ்க்கைப் பயணம் திசை மாறியது.
தனது அப்பாவின் இறுதி நினைவுகள் குறித்து அவர் கூறும்போது,
“என் அப்பாவின் அகால மரணம் எங்களைப் பேரிடியாகத் தாக்கியது. நாங்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் இறப்பதற்கு முந்தைய இரவுகூட அவர் தாமதாகவே வீடு திரும்பினார். ஓய்வெடுப்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தது இன்னமும் என் நினைவில் உள்ளது. ஆனால் அந்தக் காலகட்டம் பணி வாழ்க்கையின் பொன்னான நேரம் என்பதால் ஓய்வெடுக்கமுடியாது என்று அவர் கூறினார்.
நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் கனவினைப் பகிர்ந்துகொண்டார். அவர் இறந்துபோனதும் எங்களது வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. ஒரே இரவில் என்னுடைய ஹீரோவை இழந்துவிட்டேன். நான் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தபோதும் அவருக்கு அளித்த வாக்குறுதி எனக்குள் தீயாக எரிந்துகொண்டே இருந்தது,” என்றார்.
அவர் மிகப்பெரிய இழப்பை சந்தித்தபோதும் தனது அப்பாவின் கனவுகளை நனவாக்கத் தீர்மானித்தார்.
”அப்பாவின் கடின உழைப்பு வீணாவதை நான் விரும்பவில்லை. அவரை இழந்த பத்து நாட்களுக்குள்ளாகவே நான் பொறுப்பேற்று அப்போதைய வாடிக்கையாளர்களுடன் வழக்கம்போல் பணியைத் தொடர்ந்தேன்,” என்றார்.
சோதனை முயற்சி
புஷ்பா இண்டஸ்ட்ரீல் ரோஹித் தலாதியால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனம் மஹாராஷ்டிராவில் முன்னணி சுருள் (coil) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஏசி-க்களுக்கான அனைத்து வகையான வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் சுருள்கள், AHU, பேக்கேஜ் யூனிட்டுகள், FCU, சில்லர்கள், ட்ரையர்கள், கோல்ட் ஸ்டோரேஜ், குளிர்பதன பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கிறது. ப்ளூஸ்டார், வோல்டாஸ், ஹிடாச்சி, Daikin, எல்ஜி போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு சுருள்களையும் மூலக்கூறுகளையும் வழங்குகிறது.
ஷீத்தல் 2007-ம் ஆண்டு நிறுவனத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டபோது ஏழு ஊழியர்கள் இருந்தனர். அப்போதிருந்து புஷ்பா இண்டஸ்ட்ரீஸ் சிறப்பாக வளர்ச்சியடைந்து இன்று அதன் முக்கியக் குழுவில் 18 ஊழியர்கள் உள்ளனர். மேலாளர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.
இளம் வயதில் அப்பாவை இழந்த சோகத்துடனும் வணிகத்தை வழிநடத்தத் தேவையான ஆதரவின்றியும் ஷீத்தல் பல்வேறு சவால்களை சந்தித்தார். இவர் எவ்வாறு நிறுவனத்தை நிர்வகிப்பார் என மூத்த ஊழியர்கள் கவலைப்பட்டனர்.
”புதிய முதலாளி குறித்து வாடிக்கையாளர் விவரம் கேட்டனர். முதலாளி ஒரு இளம் பெண் என்று தெரிந்ததும் அவர்கள் அனைவரும் விலகிக்கொண்டனர். ஒரு வார காலத்திற்குள் அப்போதிருந்த வாடிக்கையாளர் அனைவரையும் இழந்துவிட்டேன். அடுத்த சில நாட்களுக்கு பணிக்குச் சென்றேன். எந்தவித செயல்பாடுகளும் இல்லாத நிலையில் அலுவலக விளக்குகளை அணைத்துவிட்டு வீடு திரும்பினேன். தோல்வியடைந்த உணர்வு ஏற்பட்டது,” என்றார்.
சிறு முயற்சி
எனினும் வணிகம் குறித்து புரிந்துகொண்டு நிலைமையை மாற்ற ஷீத்தல் முடிவு செய்தார். அவர் வணிக நுணுக்கங்களைக் கற்றறிய மூத்த ஊழியர்கள் சிலர் உதவினர். அத்துடன் அவரது அப்பாவின் விரிவான குறிப்புகள் பணி வாழ்க்கைக்கு பெரிதும் உதவியது.
”நான் அவரது வரிகளைப் படிக்கத் தொடங்கினேன். அவை எனக்கு சிறந்த வழிகாட்டலாக அமைந்தது. எனக்குள் மீண்டும் நம்பிக்கை பிறந்தது. எலக்ட்ரிக்கல் வயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
உற்பத்தி சார்ந்த நுணுக்கங்களைக் கற்றறிய நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுக் கொண்ட பிறகு மும்பையில் உள்ள ஃபாதர் ஆக்னெல் கல்லூரியில் ஏர் கண்டிஷன் மற்றும் ரெஃப்ரிஜ்ரேஷன் குறித்த பாடத்தில் சேர்ந்தார். இந்தப் பாடப்பிரிவில் ஆண்கள் மட்டுமே இருந்தனர்.
பிழைகள் வருவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நீக்கிவிடக்கூடிய செயல்முறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
“என்னுடைய துறையில் திறனை மேம்படுத்த செயல்முறைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நான் தவறுகள் இழைத்து நிராகரிக்கப்பட்டுள்ளேன். நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதில் எனக்கிருந்த மன உறுதியே என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்தது,” என்றார்.
ஊழியர்களின் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் போக்க தொடர்ந்து ஊதிய உயர்வையும் சலுகைகளையும் வழங்கினார். நிறுவனத்துடன் முன்பு இணைந்திருந்த வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டார்.
“ஆரம்பத்தில் இழப்பை சந்தித்தபோதும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள நான் தனிப்பட்ட முறையில் பலரைத் தொடர்பு கொண்டேன். என் அப்பா இல்லாத நிலையிலும் எந்தவித சிக்கலும் இன்றி அவர்களது ஆர்டர்கள் பூர்த்திசெய்யப்படும் என உறுதியளித்தேன். தரமான சிறந்த தயாரிப்பை வழங்குவதில் முழு கவனமும் செலுத்துமாறு ஊழியர்களை அறிவுறுத்தினேன்,” என்றார்.
நிறுவனத்தின் வளர்ச்சி
2007-ம் ஆண்டு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் ஆண்டிற்கு 55,000 சுருள்கள் என்கிற அளவில் இருந்தது. அப்போதிருந்த தொழிலாளர் மற்றும் இயந்திரங்களின் அளவு அதிகரித்தது. தற்போது நிறுவனத்தின் உற்பத்தித் திறன் ஆண்டிற்கு 3,60,000 சுருள்கள் என்கிற அளவில் உள்ளது. ஷீத்தல் மேலும் கூறுகையில்,
“ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கருவிகள் சேமிக்கும் அறை உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கும் தரக் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்றவாறு தயாரிப்புகளை உருவாக்குவதில் எங்களது குழு கவனம் செலுத்துகிறது,” என்றார்.
சேவ்ரி பகுதியில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையில் 30 தொழிலாளர்கள் இரண்டு ஷிஃப்டுகளாக பணியாற்றுகின்றனர். வளர்ச்சிக்கு இலக்காக நிர்ணயித்த 15 சதவீதத்தை கடந்த பன்னிரண்டு ஆன்டுகளில் இந்நிறுவனம் வெற்றிகரமான எட்டியுள்ளது.
2018-ம் ஆண்டில் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் 18 சதவீதமாக இருந்தது. எதிர்காலத்தில் வணிகத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் சர்வதேச சந்தைகளில் செயல்படவும் ஷீத்தல் விரும்புகிறார்.
உற்பத்திப் பிரிவில் பெண்கள்
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய உற்பத்தி போன்ற பிரிவுகளில் ஷீத்தல் முன்னுதாரணமாகக் கருதவோ பின்பற்றவோ தகுந்த நபர்கள் யாரும் இல்லை. அவர் ஒரு பெண் என்கிற காரணத்தினாலேயே ஆர்டர்கள் கிடைத்ததாக பலர் பலமுறை கூறியுள்ளனர். மற்றொரு புறம் வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் முதலாளியுடன் பேசவேண்டும் என்கிற எண்ணத்தில் அலுவலகத்திற்கு வரும்போது அத்தகைய பொறுப்பில் ஒரு ஆண் இருப்பார் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தத் துறையில் செயல்பட விரும்புவோருக்கு ஷீத்தல் அறிவுரையாக கூறும்போது,
“நான் முயற்சியைத் தொடங்கியபோது சந்தித்த சவால்கள் என் நினைவில் உள்ளது. ஆனால் எனக்கு நானே முன்மாதியாகத் திகழவேண்டும் என தீர்மானித்துக்கொண்டேன்.”
அந்த சமயத்தில் HVAC-R துறையில் செயல்பட்ட உற்பத்தியாளர்களில் நான் மட்டுமே பெண். விடாமுயற்சியுடனும் துணிவுடனும் நான் என் வணிகத்தை சிறப்பாக நிலைநிறுத்தினால் மற்ற பெண்களுக்கு என்னால் உந்துதலளிக்கமுடியும் என்று நினைத்தேன். இதுவே என்னைத் தொடர்ந்து செயல்படவைத்தது,” என்றார்.
மனம் தளரவில்லை
ஆரம்பத்தில் சந்தித்த சவால்கள் இல்லாதபோதும் ஷீத்தல் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
“அம்மா, மனைவி, மருமகள், நிறுவனத்தின் முதலாளி என பல்வேறு பொறுப்புகளை சுமப்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். அம்மாக்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்றும் குழந்தைகளை பராமரிப்பதில் நேரம் செலவிடவேண்டும் என்றும் பலரது எதிர்பார்ப்பு உள்ளது.
”என்னுடைய கணவர் நிலையான பணியில் இருக்கும்போது நான் ஏன் பணிக்குச் செல்லவேண்டும் என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பலர் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 60-70 சதவீத பெண்கள் பணி வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு இத்தகைய கருத்துகள் காரணமாக இருக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார்.
தொடர் கற்றல்
தனது அப்பாவின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்தும் இந்தப் பயணத்தில் வழியே அவர் கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்தும் ஷீத்தல் மகிழ்ச்சியடைகிறார். அவருடன் இணைந்துகொண்ட ஒவ்வொருவரின் வாயிலாகவும் ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டுள்ளார்.
”கடந்த பத்தாண்டு காலமும் ஆபத்து, கடின உழைப்பு, கற்றல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. நடந்தவற்றை நினைத்து நான் அச்சப்படவில்லை. இதற்கு முன்பு நான் செய்த தவறுகள் என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் இன்றைய நிலையை எட்டவும் உதவியுள்ளது,” என்றார்.
அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடிய படிப்பினை ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார்.
“ஒவ்வொரு நிலையிலும் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய அப்பா எனக்கு அறிவுறுத்திய முக்கிய விஷயங்களில் ஒன்று. அதாவது பணத்தைக் காட்டிலும் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்பார்.
நான் வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது இந்த அணுகுமுறையே வணிக நுணுக்கங்களைக் கற்றறியவும் இழந்த வாடிக்கையாளர்களைத் திரும்பப் பெறவும் உதவியது. நான் இதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். எனக்கு இதைக் கற்றுக்கொடுத்ததற்காக என்னுடைய அப்பாவிற்கு நன்றி பாராட்டுகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா