எலன் மஸ்க்கினால் வர்ச்சுவல் கரன்சியில் புதிய வரலாறு: உச்சம் தொட்ட பிட்காயின்!
பிட்காயினில் முதலீடு செய்த எலான் மஸ்க்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன் ‘#bitcoin’ என்ற ஹேஷ்டேகை தனது ட்விட்டர் கணக்கின் மூலம் பகிர்ந்திருந்தார். அப்போதே சில ஆருடங்கள் வெளியானது.
அதாவது மஸ்க் கிரிப்டோகரன்சியான பிட்காயினில் முதலீடு செய்யப்போகிறார் என்பதுதான் அந்த ஆருடங்கள். அது இப்போது பலித்துள்ளது. மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்காரணமாகவே, மஸ்க் தனது டுவிட்டரில் பிட்காயின் அறிவிப்பை வெளியிட்டார். எனினும் அடுத்த சில நாட்களிலேயே அந்த ஹேஷ்டேகை மஸ்க் தனது கணக்கிலிருந்து நீக்கிவிட்டார்.
இதற்கிடையே, டெஸ்லா நிறுவனம் பிட்காயினை வாங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியானவுடன் ஊசலாடிக் கொண்டிருந்த பிட்காயினின் விலை 17 சதவீதம் உயர்ந்து, முன்னெப்போதுமில்லாத வகையில் 44,220 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டது. Bitcoin மட்டுமில்லை Dogecoin உள்ளிட்ட மற்ற மறையீட்டு நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து பிட்காயின் போன்ற மின்னணு நாணயங்கள், தங்கம் அல்லது அதனுடன் தொடர்புடைய முதலீடுகளில் கவனம் செலுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது.
புதிய மாற்றம்!
விர்ச்சுவல் கரன்சி எனப்படும் மறையீட்டு நாணய வரலாற்றில் டெஸ்லாவின் முதலீடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி ஆராய்ச்சி நிறுவனமான மெசாரியின் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவர் எரிக் டர்னர் என்பவர்,
“டெஸ்லா முதல் ஆளாக பிட்காயின் முதலீட்டை தொடங்கி வைத்துள்ளதை அடுத்து, மற்ற நிறுவனங்களும் பிட்காயினில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இவர் இப்படி கூறிய அதே வேளையில், பிட்காயின் ஒரு "மிகவும் ஊசலாட்டம்" கொண்ட விர்ச்சுவல் கரன்சி என்று markets.com-ன் தலைமை சந்தை ஆய்வாளர் நீல் வில்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“டெஸ்லா தற்ப்போது பெரிய அபாயத்தை சந்திக்கத் தொடங்கியுள்ளது. இது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்," என்று அந்த எச்சரிக்கையை தெரிவித்த்துள்ளார்.
தொகுப்பு: மலையரசு