‘ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பு அரிது; ஆனால் நடைபெறும்’ - நிறுவனர் பாவிஷ் அகர்வால்!
ஓலா ஸ்கூட்டர் தீப்பிடிப்பது அரிது ஆனால் அது நிகழலாம் என பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
”ஓலா ஸ்கூட்டர் தீப்பிடிப்பது அரிது, ஆனால் அது நிகழலாம்...” என பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததில் இருந்து, நிறுவனம் தற்போது வரை 1400 யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே இருக்க மறுபுறம் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தகவல்கள் தினசரி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் நிகழ்வு இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடந்துக் கொண்டு இருக்கிறது.
இந்த விபத்து குறித்த தகவல்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓலா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் எலெக்ட்ரிக் வாகன தீப்பிடிப்பு சம்பவம் குறித்து வெளிப்படையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, தனியார் நிறுவன நிகழ்வில் பேசிய ஓலா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால்,
“எதிர்காலத்தில் அதிக மின்சார வாகனங்கள் தீ விபத்துகள் ஏற்படக்கூடும் என்றாலும், அவை அரிதான சம்பவங்களாக இருக்கும் என தான் நம்புவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.”
கடந்த மார்ச் மாதம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து அதிக புகையை வெளிப்படுத்தியது. இந்தத் தகவல் பெரிதளவு பரவி பீதியை ஏற்படுத்திய நிலையில், நிறுவனம் கடந்த மாதம் 1400 யூனிட்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து இந்த சிக்கலை ஆய்வு செய்ய ஒரு வெளிப்புற நிபுணரை நிறுவனம் நியமித்திருக்கிறது.
எதிர்காலத்தில் ஏதேனும் இதுபோன்ற தீப்பிடிப்பு நிகழ்வுகள் நடக்குமா என்ற கேள்விக்கு அகர்வால் பதிலளித்ததாக ராய்ட்டர்ஸ் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில்,
”எங்கள் அர்ப்பணிப்பு என்னவென்றால், ஒவ்வொரு சிக்கலையும் நாங்கள் பகுப்பாய்வு செய்வதை உறுதி செய்வோம், இதில் திருத்தங்கள் இருந்தால், அவற்றை கண்டிப்பாக சரிசெய்வோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கிறது என்பதற்கு பிற நிறுவனங்கள் விதிவிலக்கு அல்ல. எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒட்டுமொத்த தொழில்துறையும் மோசமான சூழலை சமீப நாட்களாக சந்தித்து வருகிறது. ஒகினாவா மற்றும் பியூர் இவி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது எலெக்ட்ரிக் வாகன தீப்பிடிப்பு நிகழ்வை எதிர்கொண்டன. தெலங்கானாவில் எலெக்ட்ரிக் வாகன தீப்பிடிப்பு நிகழ்வில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் போன்றே ஒகினாவாவும் 3000-க்கும் மேற்பட்ட யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது. அதேபோல், ப்யூர் இவி-யும் 2000-க்கும் மேற்ப்ட்ட யூனிட்களை திரும்பப் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து அரசும் தனது தரப்பில் விசாரணையை தொடங்கி இருக்கிறது.
அதன்படி, சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த நிகழ்வு குறித்து டுவிட் செய்திருந்தார். அதில்,
“இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் காரணம் நிறுவனத்தின் அலட்சியம் என்பது கண்டறியப்படும் பட்சத்தில், கடுமையான அபராதம் விதிக்கப்படும் மற்றும் பழுதடைந்த அனைத்து வாகனங்களும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்," என பதிவிட்டிருந்தார்.
ஆங்கிலத்தில்: தாருத்ரு | தமிழில்: துர்கா