துப்புரவு பணியாளர் டூ பஞ்சாயத்து தலைவர்- ஆனந்தவள்ளி சாதித்தது எப்படி?
பல ஆச்சரியங்களை கொண்டிருந்தது இந்தாண்டு கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்..
வாழ்க்கை சில சமயங்களில் நாம் நினைத்து பார்க்காத உயரத்தைக் கொடுக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் விஷயம். அப்படித்தான் ஆனந்தவள்ளிக்கும்.
கேரளாவின் கொளல்லம் மாவட்டத்தில் பதானபுரத்தின் புதிய தொகுதி பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய அவர், சில வாரங்களுக்கு முன்பு நினைத்திருக்கமாட்டார், இந்த அலுவகத்தில் பஞ்சாயத்து தலைவராகப்போகிறோம் என்று.
ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக ஆனந்தவள்ளி பணியாற்றியுள்ளார். அங்கு நடைபெறும் கூட்டங்களின் போது தேநீர் பரிமாறுவது துப்புரவு மற்றும் பிற வேலைகளைச் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார். அதே அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு இனி அவர் தலைமை தாங்க உள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட ஆனந்தவள்ளி, 654 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், எஸ்சி / எஸ்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது புதிய பதவி நியமனம் குறித்து பதிலளித்த ஆனந்தவள்ளி,
இது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், தனது புதிய பொறுப்புகள் குறித்து பதட்டமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் உண்மையில் ஆனந்தவள்ளி போன்ற உழைப்பாளர்களையும், புதிய முகங்களையும் வெளிஉலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அவர்களில் ஒருவர் ஆர்யா ராஜேந்திரன், அவர் தனது 21 வயதில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நாட்டிலேயே இளமையான மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, 21 வயதான ரேஷ்மா மரியம் ராய், பதனம்திட்டா மாவட்டத்தில் அருவபுளம் பஞ்சாயத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரேஷ்மா வேட்புமனு தாக்கல் செய்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று தான் அவருக்கு 21 வயது தொடங்குகிறது. இதனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடிந்தது. இப்படி பல ஆச்சரியங்களை கொண்டிருந்தது இந்தாண்டு கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்..
credits - onmanorama