டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி மீண்டும் நியமனம்!
டாடா சன்ஸ் தலைவராக சைர்ஸ் மிஸ்ட்ரியை மீண்டும் நியமித்து உத்தரவிட்டுள்ள என்.சி.எல்.ஏ.டி, தற்போது தலைவராக உள்ள என்.சந்திரசேகரன் நியமனம் செல்லாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சைரஸ் மிஸ்ட்ரிக்கு கிடைத்த பெரிய வெற்றியாக, தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயம் (என்.சி.எல்.ஏ.டி) அவரை டாடா சன்ஸ் செயல் தலைவராக மீண்டும் நியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், இதன் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ் சார்பில் மேல் முறையீடு செய்ய வசதியாக நான்கு வாரங்களுக்கு இந்தத் தீர்ப்பு செயலாக்கம் பெறவும் தீர்ப்பாயம் தடை விதித்தது.
கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த தீர்ப்பாயம், டாடா சன்ஸ் நிறுவனத்தை பொது நிறுவனத்தில் இருந்து தனியார் நிறுவனமாக மாற்றுவதையும் ரத்து செய்தது.
ஷபூர்ஜி–பூலாஞ்சி குடும்ப வாரிசான மிஸ்ட்ரி, 2016 அக்டோபரில் டாடா சன்ஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 2012ல் அவர் ரத்தன் டாடாவிடம் இருந்து டாடா சன்ஸ் செயல் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
நானோ கார் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய முதலீட்டு முடிவுகள் தொடர்பாக ரத்தன் டாடா மற்றும் மிஸ்டிரி இடையே கருத்து வேறுபாடு உண்டானதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மிஸ்ட்ரி, டாடா சன்ஸ் இயக்குனர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
டாடா சஸ்ன் நிறுவனத்தில் மிஸ்ட்ரியில் குடும்பம் 18.4 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. தான் நீக்கப்பட்டதை எதிர்த்து மிஸ்ட்ரி தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் (என்.சி.எல்.டி) முறையீடு செய்தார். ஒடுக்குமுறை மற்றும் தவறான நிர்வாகம் ஆகிய புகார்கள் அடிப்படையில், டாடா சன்ஸ் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்ட 20 பேர் மீது மிஸ்ட்ரி வழக்கு தொடர்ந்திருந்தார். 2017 மார்ச்சில் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் பத்தில் ஒரு பங்கிற்கு குறையாமல் நிறுவன பங்குகளை வைத்திருந்தால், பங்குதாரர் நிறுவனம் மீது ஒடுக்குமுறை மற்றும் தவறான நிர்வாகம் அடிப்படையில் வழக்கு தொடர கம்பெனிகள் சட்டம், 2013ன் 44வது பிரிவு வழி செய்கிறது.
மேல் முறையீடு செய்த போது, என்.சி.எல்.ஏ.டியில், மிஸ்ட்ரி தரப்பிற்கு பகுதியளவு வெற்றி கிடைத்தது. 10 சதவீத பங்குகள் தேவை விலக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு, என்.சி.எல்.டியிடம் விடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், என்.சி.எல்.டி தன்னை மீண்டும் நியமிக்க வேண்டும் எனும் மிஸ்டியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. தவறான நிர்வாகம் மற்றும் சிறுபான்மை பங்குதாரர்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்தது.
மும்பை என்.சி.எல்.டி அளித்த தீர்ப்பிற்கு எதிராக மிஸ்ட்ரி, மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த என்.சி.எல்.ஏ.டி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், எஸ்.ஜே.மகோபாத்யா தலைமையிலான பெஞ்ச் இதில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்:சைபர்சிம்மன்