யுவர்ஸ்டோரி தமிழ் 2019ல் வெளியிட்ட வைரல் கதைகளின் தொகுப்பு!
ரூ.4.5கோடி குவளை, நதி கடந்து உணவு டெலிவரி, 500கி.மீ பயணித்து ரத்ததானம், வாழ்க்கையை மாற்றிய போட்டோ... இப்படி பல சுவாரசிய கதைகள் உள்ளே...
டிசம்பர் மாதம் வந்துவிட்டது. அடுத்தாண்டு குறித்த எண்ணற்ற கனவுகளுடனும், இலக்குகளுடனும் 2020ம் ஆண்டை கமல் சாரின் பாடலோடு வரவேற்க உள்ளோம். அதற்கு முன்னதாக சின்னதாய் 2019ம் ஆண்டை ரீக்கேப் செய்யும் முயற்சியில், யுவர்ஸ்டோரி தமிழ்வெளியிட்ட வைரல் செய்திகளின் தொகுப்பு!
நதி கடந்து உணவு டெலிவரி; ரூ.16,800 ஆர்டர் கொடுத்த தனிநபர்- ஜொமாட்டோ வெளியிட்ட சுவாரஸ்யங்கள்!
நினைத்ததை நினைத்தவுடன் நினைத்த இடத்தில் உண்ண விரும்புபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமே உணவு டெலிவரி நிறுவனங்கள். அதில், வாடிக்கையாளர்களுக்கு கியூட் விஷயங்களை செய்துவரும் ‘ஜொமாட்டோ’, அவர்களது கஸ்டமர் மற்றும் ஓட்டல்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுடன் கூடிய வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
அவ்வறிக்கையில், இந்தியாவில் ஜொமாட்டோ ஒரே வருடத்தில் 15 நகரங்களிலிருந்து 213 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது என்றும் டயர் 2, 3 நகரங்கள் மட்டுமின்றி டயர் 5 நகரங்களும் ஆன்லைன் டெலிவரியை பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது.
அதிகம் கேஷ்லெஸ் ஆன்லைன் பணம் மூலம் உணவை பெற்ற கிராமமாக ஆந்திராவை சேர்ந்த துணி என்னும் சிறிய கிராமத்தை குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் டெலிவரியை அறிமுகப்படுத்திய நாள் அன்றே 1000 ஆர்டர்களை பஞ்சாபில் உள்ள அபோகர் கிராமம் கொடுத்துள்ளது. அன்று முதல் இன்று வரை குறைந்தது நாளொன்றுக்கு 2000 ஆர்டகளை அக்கிராமத்தில் இருந்து மட்டுமே வருகின்றதாம்.
லக்னோவில் உள்ள ஒரு தனிநபர் 16,800 ரூபாய் மதிப்புள்ள உணவை ஆர்டர் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த சுவராஸ்ய தகவல், நதி கடந்த உணவு டெலிவரி.
குவஹாத்தியில் ஒரு நகருக்கு செல்ல பிரம்மபுத்திரா நதியின் ஊடே படகில் பயணித்து ஹக்கா நூடுல்சை டெலிவரி செய்துள்ளது Zomato. இதற்கு ஒன்றரை மணிநேரம் ஆனதாக அந்த நிறுவனமே அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு முன்பு ஜொமாட்டோவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட அது வைரலாகியது. ஜொமாட்டோ டீ சர்ட் அணிந்து நின்றிருந்த டெலிவரி பாய்ஸ்கள் நீண்டதூரத்திற்கு நின்றுகொண்டிருந்தனர் அப்புகைப்படத்தில்...
வேறு எதற்காக பிரியாணி வாங்கதான் அந்த க்யூ. இம்மா பெரிய வரிசைக்கு காரணமான பிரியாணி ஆர்டர் செய்து ருசிக்கனுமா? கீழுள்ள லிங்கை கிளிக்கிடுங்கள்...
அபுதாபி லாட்டரி சீட்டும்... இந்திய அதிர்ஷ்டசாலியும்...
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரிச்சீட்டு குலுக்கல் சட்டப் பூர்வமானது. அந்நாட்டில் படு ஃபேமசான அதிகப்பட்டச பைசா மழை பொழிய வைக்கும் லாட்டரி சீட்டு தான் அபுதாபி டியூட்டி பிரீ ’பிக் டிக்கெட்’. ஒவ்வொரு மாதமும் 3ம் தேதி இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடைபெறுகிறது. ஜாகுவார், கொர்வெட், ஃபோர்டு முஸ்டாங் மற்றும் மினி-கூப்பர் போன்ற காஸ்ட்லி டிரீம் கார்களை பரிசாகக் கொண்ட லாட்டரி சீட்டும் ஒவ்வொரு மாதமும் குலுக்கப்படுகிறது.
2019ம் ஆண்டில் குலுக்கப்பட்டதில் பல வெற்றி பெற்ற லாட்டரி சீட்டுகள் இருந்தது இந்தியர்களின் வசம். அப்படி கோடீஸ்வரரான இந்தியர்களில் ஒருவர் ஸ்ரீனுதரன்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீனு குடும்ப வறுமையால், அபுதாபிக்கு வேலைக்கு சென்றுள்ளார். மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி 18 மாதங்களாய் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். ஒவ்வொரு மாதங்களும் ஏமாற்றங்களுமே மிஞ்சிய நிலையில், பல மாத காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. ஊரில் பணமில்லாமல் பாதியில் நிறுத்திய வீடு கட்டும் பணியையும் நிறைவேறி, கடன்களையும் அடைக்க உதவியுள்ளது லாட்டரி சீட்டில் விழுந்த பரிசு பணம்...
பரிசு பணம் எம்புட்டு தெரியுமா? மேலும் அறிந்து கொள்ள:-
வைரலான பணிப்பெண்ணின் விசிட்டிங் கார்டு!
ஒரு சமூக வலைதளப் பதிவும், சில ஆயிர பகிர்வுகளும், அதனால் உண்டாகிய வைரல் என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதற்கான உதராணமே இது. மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த கீதா காலே, வீட்டு வேலைகள் செய்யும் பணிபுரிந்து வருகிறார். அவர் வேலை செய்யும் வீடுகளில் ஒரு வீட்டின் வேலை பறிபோகியுள்ளது. அதன்மூலம் அவருக்கு கிடைத்து வந்த மாதந்திர சம்பளமும் வருத்தத்தில் இருந்துள்ளார்.
அதை கண்ட, கீதாவின் நிகழ்கால வீட்டின் எஜமானியான தானாஸ்ரீ ஷிண்டே, அவருக்கு ஆறுதல் கூறி புதிய விசிட்டிங் கார்ட்டை அடித்துக் கொடுத்துள்ளார். அதை அவருடைய நண்பருடன் பகிர, அவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அவ்வளவுதான், பங்களா வீட்டை விட்டு வெளியேறிய படையப்பாவின் வாழ்க்கை ஒரே பாட்டில் ஓஹாவென மாறிய போல், ஒரே நாள் இந்தியா முழுக்க ஃபேமசாகி போனார். வைரலுடன் எக்கச்சக்க வேலை வாய்ப்புகளாலும் திக்குமுக்காடியுள்ளார்.
தொடர்ந்து படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
வாங்கிய போதோ 90 ரூபாய்; விற்றதோ ரூ4.5 கோடிடிடி...
இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்ட்சைர் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டருகே இருந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான கடை ஒன்றில் அழகிய குவளை ஒன்றை ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங் (இந்திய மதிப்பில் 90ரூ) விலைக்கு வாங்கியுள்ளார். அந்த கடையில் ஏதேனும் ஒரு பொருள் வாங்குவதன் மூலம் அத்தொண்டு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு உதவ முடியும் என்பதால் அதனை அவர் வாங்கியுள்ளார்.
எலுமிச்சை நிற பேக்கிரவுண்டில், பச்சை வண்ணித்தில் செடி கொடிகள் படர்ந்து அதில் சிவப்பு நிற பூ வரைந்திருந்தது. முன் பக்கம் குவளை போன்றும் பின் பக்கம் சுவரில் மாட்டி வைப்பது போலும் ஒரு வித்தியாசமாக இருந்தாலும், அதை வைத்து என்ன செய்வது என்று இ-பே மூலம் விற்க முடிவு செய்தார். எனவே, அந்த ஜாடியின் புகைப்படத்தை அந்த இணையதளத்தில் பதிவு செய்து மிகக்குறைந்த விலையையும் நிர்ணயித்தார்.
ஆனால், அவர் சற்றும் எதிர்பாராதவிதமாய் போட்டிபோட்டுக் கொண்டு விலை பேசி, குவளையின் மதிப்பை உயர்த்தியுள்ளனர். ஆயிரம், இரண்டாயிரங்களில் விலை பேசவில்லை...
லட்சங்களைத் தாண்டி கோடிகளுக்கு சென்றது குவளையின் மதிப்பு. குவளையின் உரிமையாளருக்கோ ஒன்னும் விளங்கலை. இது என்னய்யா... அப்படியென்னய்யா இருக்கு குவளையில் என்று குழப்பம் வருகிறதா. ரொம்ப குழம்ப வேண்டாம், முழு கட்டுரை இங்கே:-
500கி.மீ பயணித்து ரத்ததானம் செய்த இளைஞர்!
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும் ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்லவும் உதவும் ரத்தம், உடலின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. அதன் மகத்துவத்தையறிந்த இளைஞர் ஒருவர் ரத்த தானம் செய்வதற்காக 500கி.மீ பயணித்துள்ளார். ஏனெனில், அவருடைய ரத்த வகை 2,50,000 பேரில் ஒருவருக்கு இருக்கும் ’பாம்பே A+ve’
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் மாண்டசிங்கி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் சபிதா ராய்த்தா. இவர் கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி, ஒரு குழந்தைக்குத் தாயானார். அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், பிரசவத்துக்குப் பிறகு சபிதாவின் நிலை மிகவும் மோசமானது. அவரின் ரத்தம் மிக மிக அரிய ரத்த வகையான பாம்பே A+ve. உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய கட்டாயம். ஆனால், குருதி நன்கொடையாளரை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.
உடனே மருத்துவமனை ரத்த வங்கியின் பொறுப்பாளரும் மருத்துவருமான ரஷ்மிதா பானிகிரஹி, சபிதா தொடர்பான தகவலை அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். எக்கச்சக்கமானோர் பகிர்ந்ததில், வைரல் பதிவாகியது. விளைவாய் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ரத்தக் கொடையாளர்கள் குழுவில் இருந்த ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த திலிப் பார்க் என்னும் இளைஞர் ரஷ்மிதாவின் செய்தியைப் பார்த்தார். அக்கணமே மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துவிட்டு, பயணத்தை தொடங்கியுள்ளார். அவரிருந்த பகுதியில் இருந்து 500கி.மீ தூரம் பயணித்து ரத்தத்தைக் கொடுத்தார். ரத்தம் பெற்றுக்கொண்ட சபிதாவும் இப்போது நலம்...
ஆதலால் ரத்த தானம் செய்வீராக! தொடர்ந்து படிக்க இங்கு கிளிக்குவீராக!
பேசும் படம்: வைரல் போட்டோவால் மாறிய சிறுமியின் வாழ்வு!
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகும் விஷயங்கள் பல சமயங்களில், வீண் தகவல்களாகவும், கேலிக்களாகவும் மட்டும் முடிந்துவிடும் நிலையில், சிலவையோ வைரலாகியவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. அப்படி, பத்திரிக்கை நிரூபர் ஒருவர் எடுத்த ஒரு சிறுமியின் புகைப்படமே பேசியது.
ஐந்து வயதான சிறுமி ஒருவர், கையில் அலுமினியப் பாத்திரத்துடன் தன் சக வயதுக் குழந்தைகள் சீருடை அணிந்து பள்ளியில் படிப்பதை வகுப்பறையின் வாசலில் இருந்தபடி ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறார் அந்த புகைப்படத்தில். சிறுமியின் இந்த ஏக்கத்தைப் படம் பிடித்துள்ளார் தெலுங்கு நாளிதழின் போட்டோகிராபர் ஸ்ரீநிவாஸ். ‘பசியின் பார்வை’ எனத் தலைப்பிட்டு நாளிதழில் வெளியான இந்தப் படம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
ஐதராபாத்தின் குடிமல்கபூரில் இயங்கி வருகிறது தேவல் ஜாம் சிங் அரசு உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார் சிறுமி திவ்யா. கூலித் தொழில் செய்து வரும் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட மதிய நேரத்தில் பசியால் வாடியவர் தினசரி பள்ளிக்கு வந்து மாணவர்கள் சாப்பிட்டது போகக் கிடைக்கும் மீதமான சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார்.
புகைப்படம் வைரலாகவே குழந்தைகள் உரிமைக்காகச் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுமி திவ்யாவைப் பற்றி விசாரித்தது. தொண்டு நிறுவனத்தினர் சிறுமி திவ்யா பள்ளியில் சேர உதவினர். பசிக்காகப் பள்ளிக்குச் சென்றவர் இன்று படிப்பதற்காகவும் செல்கிறார்.
ஃப்ளைட்டுக்குள் வெட்டிங் போட்டோஷூட்!
இருமனம் இணையும் மகிழ்கர நிகழ்வான திருமணத்தில் கிடைக்கும் ஆனந்தங்களை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக்கி கொள்ள நினைக்கும் இன்றைய திருமண தம்பதியினர், போட்டோகிராபியை கையிலெடுத்து காலத்தை கைது செய்து வைத்து கொள்கின்றனர். அதிலும், இப்போதெல்லாம் திருமணத்தன்று மட்டுமின்றி திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என வெட்டிங் போட்டோஷூட் செய்கின்றனர்.
கடந்தாண்டு கேரளாவில் திருமணமாகிய தம்பதியினர் எடுத்த பெரும் பாலான போட்டோஷூட்கள் இணையத்தில் வைரலாகியது.
அப்படி, வெறும் 2 நிமிடங்களில் ப்ளைட்டுக்குள் எடுக்கப்பட்ட திருமண தம்பதியினரின் போட்டோ கேரள தேசத்தை தாண்டி தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தது. கேரளாவைச் சேர்ந்த லால் மற்றும் ஷ்ருதி தம்பதியினர், கல்யாண ஆடையில் அதே சந்தோஷத்தில் மணமாலை அணிந்தபடி விமானத்தின் உள்ளும், வெளியும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி மணமகளின் சொந்த ஊரான கண்ணூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் இருவரும் அங்கிருந்து கிட்டத்தட்ட 500 கி.மீ தூரத்தில் உள்ள மணமகனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். அதற்காக கண்ணூரிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
“ஒரு வாய்ப்பு கிடைத்தால் விமான நிலையத்திலிருந்து சில புகைப்படங்களையும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் போட்டேகிராபர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை எடுத்தோம். ஃப்ளைட்டில் போட்டோ எடுக்கலாம் என்பது எங்க போட்டோகிராபரின் ஐடியா,” என்றார் மணமகன்.
உங்களுக்கும் ப்ளைட்டினுள் போட்டோ எடுக்க விருப்பமா? முழு விவரங்களையும் முதலில் படித்துவிட்டு செல்லுங்கள்.